உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம், சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் 4.6 விழுக்காட்டுக்கு குறைந்தது.
இது அதற்கு முந்தைய மாதமான அக்டோபரை விட சற்று குறைவு என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது. அக்டோபர் மாதத்தில் உள்ளூர்வாசிகளின் வேலையின்மை விகிதம் 4.8 விழுக்காடாக இருந்தது.
இந்நிலையில் சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதத்திலும் சிறிது முன்னேற்றம் தெரிந்தது.
அக்டோபர் மாதத்தில் 4.9 விழுக்காடாக இருந்த சிங்கப்பூரர்களின் வேலையின்மை விகிதம், நவம்பர் மாதத்தில் 4.7 விழுக்காடாகக் குறைந்தது.
ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் நவம்பர் மாதத்தில் 3.3 விழுக்காடாகப் பதிவாகியது. இது அக்டோபர் மாதத்தில் 3.6 விழுக்காடாக இருந்தது.
ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள வேலை நியமன, வேலைத்தகுதி கழகத்திற்கு (இ2ஐ) நேற்று வருகை தந்த மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ இப்புள்ளிவிவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.
வேலையின்மை விகிதம் சற்று குறைந்துள்ளதை 'ஆறுதல் அளிக்கும் ஒன்று' என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், வேலைச் சந்தை நெருக்கடியிலிருந்து மீண்டுவிட்டது என்று கூறிவிட முடியாது என்றும் நாட்டின் வேலை விகிதம் போன்ற மற்ற குறியீடுகளுடன் வேலையின்மை விகிதத்தை ஆராய வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார். வேலை விகிதம் தொடர்பான மிக அண்மைய புள்ளிவிவரங்கள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.
"வேலைச் சந்தை தொடர்பான புள்ளிவிவரங்களை ஒட்டுமொத்த நிலையில் பார்ப்பது அவசியம் என்று நான் எப்போதுமே எச்சரித்துள்ளேன். இதுவரை வெளியாகியுள்ள வேலை நிலவர அறிக்கைகளைப் படித்து வந்தவர்களுக்கு இது தெரியும். வேலையின்மை விகிதம் என்பது ஓர் அம்சமே.
"நம் ஊழியர் அணியின் பங்கேற்பு அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை அறிய நாம் வேலைவாய்ப்பு அளவைகளை ஆராய வேண்டும்," என்றார் திருமதி டியோ.
வேலைச் சந்தை மீண்டுவரும் பயணம் சற்று கரடுமுரடானது என்று கூறிய அமைச்சர், அரசாங்கம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் செயல்படும் என்றார்.
கொவிட்-19 கொள்ளைநோயால் வர்த்தகங்களுக்கு நீண்ட காலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இதனால் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த ஊழியர்களுக்கும் நெருக்குதல் உண்டாகும் என்றார்.
இதற்கிடையே ஊழியர் அணியில் உள்ளூர்வாசிகளின் எண்ணிக்கையை வலுவாகத் தக்கவைக்கும் முயற்சிகளை எடுத்துவரும் தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம் ஆகியவற்றுக்கு திருமதி டியோ தம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ஒருவருக்குப் பொருத்தமான வேலையைத் தேடும் முயற்சிகளில் என்டியுசி வேலை பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த 10,000 முதலாளிகள் முக்கிய பங்களிப்பதாக 'இ2ஐ'க்கு வருகை தந்த என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் கூறினார்.
தொடர்ந்து 2021ஆம் ஆண்டில் தொழிலாளர் அணி சந்திக்கக்கூடிய சவால்களுக்கிடையே ஊழியர்களுக்கு ஆதரவு அளிப்பதில் என்டியுசி கவனம் செலுத்தும் என்று திரு இங் கூறினார்.

