தனியார் சுகாதாரப் பரா மரிப்புத் துறை யினருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை நேற்று தொடங்கியது.
பார்க்வே பண்டாய் மருத்துவக் குழுமத்தைச் சேர்ந்த 50 பணியாளர்களுக்கு ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்டது. இரு வெவ்வேறு இடங்களில் தடுப்பூசி போடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர் என 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல, ஆர்ச்சர்ட் பகுதியில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவ
மனையில் மேலும் 20 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நொவினா மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் பார்க்வே பண்டாயின் மூத்த நிர்வாகிகளும் மருத்துவமனையின் தொற்றுநோய் தடுப்பு மருத்துவர்களும் அடங்குவர். தங்களது சக பணியாளர்கள் தடுப்பூசி போட தயக்கம் காட்டக்கூடும் என்பதால் முன்னுதாரணமாகத் திகழும் நோக்கில் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமது இடது கையில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகக் கூறிய பார்க்வே பண்டாயின் சிங்கப்பூர் செயலாக்கப் பிரிவின் தலைமை நிர்வாகி டாக்டர் பிரேம் குமார் நாயர், "பிரதமர் கூறியதுபோலவே வலி இல்லை. தடுப்பூசி செயல்திறன் மிக்கது என்பதோடு அவசியமானது," என்று கூறினார். சிங்கப்பூர் முழுவதும் உள்ள பொது சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களின் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையின் தொடக்கமாக பிரதமர் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை காலை தடுப்பூசி போட்டுக்கொண்டார். அடுத்த சில வாரங்களில் தங்களது குழுமத்தின் மேலும் பல பணியாளர்கள், தற்காலிக ஊழியர்கள், கடைக்காரர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் என்று டாக்டர் பிரேம் கூறினார். நாளை திங்கட்கிழமை அவர்களில் பலருக்கு தடுப்பூசி போடப்படும்.
"கொரோனா கிருமிப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைப் பின்பற்றினோம். சொந்த சுகாதாரத்தைப் பின்பற்றினோம். இருப்பினும் ஒன்று மட்டும் பாக்கி இருந்தது. அதுதான் தடுப்பூசி. அதனையும் இப்போது எடுத்துக்கொண்டோம். இதற்காகத்தான் நங்கள் காத்திருந்தோம், என்று மவுண்ட் எலிசபெத் நொவினா மருத்துவமனை தாதியர் பயிற்றுநர் நூர்சியாஹிடா அப்துல் ரஹிம், 35, என்பவர் கூறினார்.
பார்க்வே பண்டாய் குழும மருத்துவர்கள், தாதியர் என 50 பேர் போட்டுக்கொண்டனர்

