ஜிசிஇ சாதாரண நிலை (‘ஓ’ லெவல்) தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே தேர்வு எழுதிய மாணவர்கள், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சிறந்த தேர்ச்சி பெற்றுள்ளனர்.
85.4% மாணவர்கள் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இந்த விகிதம் 85.2 விழுக்காடாக இருந்தது.
2017, 2016 ஆண்டுகளில் இந்த விகிதம் முறையே 83.4%, 84.3% ஆக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாகவே சாதாரண நிலைத் தேர்வுகளில் மாணவர்கள் சிறப்பான தேர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பள்ளிகள் மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள், கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு, இன்று தங்களது தேர்வு முடிவுகளை பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்திருப்பதாக கல்வி அமைச்சு, சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகம் (SEAB) ஆகியவை தெரிவித்தன.
தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும்.
சிங்பாஸ் உள்ளவர்கள் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகத்தின் இணையப் பக்கத்திலிருந்து தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
கடந்த ஆண்டுகளில் தனித்தேர்வர்கள் மட்டுமே இணையப் பக்கத்தில் தேர்வு முடிவுகளைக் காணும் வாய்ப்பு இருந்தது.
கடந்த ஆண்டு சாதாரண நிலைத் தேர்வு எழுதிய 23,688 மாணவர்களில் 99.9 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.8 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் 3 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தொடக்கக் கல்லூரிகள், மில்லீனியா இன்ஸ்டிடியூட், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்ப கல்விக் கழகம் போன்றவற்றுக்கு விண்ணப்பம் செய்ய விரும்புவோர் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகளைக் கொண்டு கூட்டுச் சேர்க்கை நடவடிக்கை மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3ஆம் தேதியிலிருந்து கூட்டுச் சேர்க்கை நடவடிக்கை இணையத் திட்டத்தைப் பயன்படுத்தலாம்.
MySkillsFuture இணையப்பக்கம், கல்வி அமைச்சின் கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி நிலையம் ஆகியவற்றில் உயர்கல்வி தெரிவுகள் பற்றித் தெரிந்துகொள்ளலாம்.
கல்வி மற்றும் வாழ்க்கைத்தொழில் வழிகாட்டி நிலையத்துடன் 6831 1420 என்ற தொலைபேசி எண் வழியாகவோ MOE_ECG@moe.gov.sg என்ற மின்னஞ்சல் வழியாகவோ தொடர்பு கொள்ளலாம்.