சிங்கப்பூர் பூல்ஸின் பிடோக் பந்தயப் பிடிப்பு நிலையத்திற்குச் செல்லும் மொத்தம் 18 பேர் சம்பந்தப்பட்ட இரு வெவ்வேறு காசநோய் குழுமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவர்கள் அனைவரும் பல காலமாக இந்த நிலையத்துக்கு அடிக்கடி செல்பவர்கள், அங்கே நீண்ட நேரம்
குதிரை பந்தய ஒளிபரப்புகளைப் பார்ப்பவர்கள் என்பது தவிர்த்து வேறெந்த பொதுவான தொடர்ப்பும் இவர்களிடையே காணப்படவில்லை.
இவர்கள் ஒருவருக்கொருவர் பழக்கமில்லாதவர்கள். இவர்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும் அடையாளம் காணப்படவில்லை.
காசநோயானது முக்கியமாக நுரையீரலைப் பாதிக்கும் தீவிர தொற்று நோய். இருமல், தும்மல் மூலம் காற்றில் பரவும் சிறிய திரவத் துளிகளால் இந்நோய் பரவுகிறது. இது அதிகம் பாதிக்கும் தொற்றுநோயாக இருந்தாலும், சிகிச்சை தொடங்கியதும் நோயாளிகள் விரைவாக தொற்றுநோயற்றவர்களாக மாறுகிறார்கள்.
ஹவ்காங் அவென்யூ 1, புளோக் 174டி-இன் வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த நால்வருக்கு கடந்த அக்டோபர் மாதம் நோய் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டதும், காசநோய் குழுமம் அடையாளம் காணப்பட்டது.
இரு புதிய குழுமங்களைச் சேர்ந்த 18 சம்பவங்கள் 2015 பிப்ரவரி முதல் கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கண்டறியப்பட்டன.
2018 ஜூலை முதல் 2020 பிப்ரவரி வரை கண்டறியப்பட்ட முதல் குழுமத்தைச் சேர்ந்த ஐந்து சம்பவங்களில் தொடர்பு உறுதிசெய்யப்பட்டு 2020 ஜூலை 28ஆம் தேதி சுகாதார அமைச்சுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இரண்டாவது குழுமத்தைச் சேர்ந்த 13 சம்பவங்கள், 2015 பிப்ரவரி முதல் கடந்த ஆண்டு அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் கண்டறியப்பட்டு, கடந்த டிசம்பர் 1 முதல் ஜனவரி 11 வரையிலான காலகட்டத்தில் அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
“நோய் கண்டயறிப்பட்டதும் இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட்டது. தற்போது பொது சுகாதார ஆபத்து எதுவும் இல்லை” என்று சுகாதார அமைச்சு இன்று கூறியது.
நெருங்கிய தொடர்பு இல்லாதவர்களுக்கு இந்நோய் பரவும் ஆபத்து மிகக் குறைவு என்றும் அது சுட்டியது.
பாதிக்கப்பட்ட 18 பேருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள் சிங்கப்பூர் காசநோய் ஒழிப்பு திட்டத்தால் அடையாளம் காணப்பட்டு நோய் சோதனைக்காக தொடர்பு கொள்ளப்பட்டனர்.
பாதுகாப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மார்ச் 25ஆம் தேதி வரை சிங்கப்பூர் பூல்ஸின் பிடோக் பந்தயப் பிடிப்பு நிலையத்திற்குச் சென்றவர்கள் பரிசோதனைக்காகத் தொடர்புகொள்ளப்படுவார்கள்.
இச்சோதனை எண் 142, மோல்மின் சாலையில் உள்ள காசநோய் கட்டுப்பாட்டுப் பிரிவில் (டிபிசியு) இலவசமாக செய்யப்படும்.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து சென்ற ஆண்டு மார்ச் 25 வரை பிடோக் பந்தயப்பிடிப்பு நிலையத்தில் நீண்ட நேரம் செலவிட்டவர்களுக்கும் சோதனை மேற்கொள்ளப் படும். பிடோக் பந்தயப் பிடிப்பு நிலையத்துக்குச் சென்றவர்கள் காச நோய் சோதனை மேற்கொள்ள விரும்பினால் 62584430 என்ற டிபிசியு-வின் அவசர சேவை எண்ணில் அழைக்கலாம்.