சிங்கப்பூர் கடந்த ஆண்டு $17.2 பில்லியன் அளவுக்கு நிலையான சொத்து முதலீடுகளைப் பெற்றுள்ளது.
கொவிட்-19 சூழலால், நாடு சுதந்திரம் அடைந்தது முதல் சந்தித்திராத மோசமான பொருளியல் நெருக்கடிக்கு இடையிலும் இந்த முதலீடுகளை சிங்கப்பூர் பெற்றுள்ளது. மேலும், பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் இடைக்காலம் முதல் நீண்டகாலம் வரையிலான இலக்குகளையும் மீறி சாதனை அளவு முதலீடுகள் கிடைத்துள்ளன.
2020ஆம் ஆண்டில் $8 பில்லியன் முதல் $10 பில்லியன் வரையிலான நிலையான சொத்து முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்க்கும் என கழகம் முன்னுரைத்து இருந்தது. மற்றொரு சாதனையாக 2019ஆம் ஆண்டில் $15.2 பில்லியன் முதலீடுகளையும் கடந்த ஆண்டின் முதலீட்டு அளவு முறியடித்து உள்ளது.
அது மட்டுமின்றி, 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆகப்பெரிய முதலீடுகள் கடந்த ஆண்டில்தான் கிடைத்தன. 2008ஆம் ஆண்டில் $18 பில்லியனுக்கும் மேலான முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்தது.
மின்னியல், ரசாயனம், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி போன்ற துறைகளில் அதிகப்படியான மூலதன முதலீடுகள் வரப்பெற்றது ஒட்டுமொத்த முதலீடுகள் உயரக் காரணமாக அமைந்தது. இந்த விவரங்களை கழகம் தனது வருடாந்திர ஆய்வறிக்கையில் வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக நேற்றுக் காலை வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் ஊடகத்தினரிடம் பேசினார். “எல்லைகளைத் திறப்பதில் நாம் எடுத்து வரும் முயற்சிகள், வெளிப்புறத் தொடர்புகளைப் பராமரித்தல், வர்த்தகத் தொடர்ச்சி போன்ற அம்சங்கள் சிங்கப்பூரிலேயே தங்களது வர்த்தக நடவடிக்கைகளைத் தொடரும் நம்பிக்கையை உலக நிறுவனங்களுக்கு வழங்கின,” என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.
இப்போது கிடைத்திருக்கும் முதலீடுகள் அனைத்தும் செயல்பாட்டுக்கு வரும்போது அவற்றின் மூலம் அடுத்த ஐந்தாண்டு
களுக்கு 19,352 வேலைகள் உருவாகும். மேலும், திட்டமிடப்பட்ட $31.2 பில்லியன் வருடாந்திர மதிப்புக் கூட்டுப் பங்களிப்பையும் அந்த முதலீடுகள் ஏற்படுத்தும். நிறுவனம் ஒன்று சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு நேரடியாகப் பங்களிப்பதே மதிப்புக் கூட்டு நடவடிக்கை. ஊழியர்கள் சம்பளம் மற்றும் நிறுவன லாபம் போன்ற அம்சங்களையும் அது உள்ளடக்கும்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டில் கிடைத்த முதலீடுகள் மூலம் 33,000 வேலைகள் கிடைக்கும் என்றும் வருடாந்திர மதிப்புக் கூட்டு நடவடிக்கைக்கு $29.4 பில்லியன் பங்களிப்பு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டது.
புதிய முதலீடுகள் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொழில்துறையில் அடுத்த ஐந்தாண்டுகளில் 4,200 வேலைகள் உருவாகும். அவற்றில் 3,000க்கும் மேற்பட்ட வேலைகள் அத்துறையின் தலைமை அலுவலகங்களுக்கும் நிபுணத்துவச் சேவைகளுக்கும் பங்களிக்கும்.
அது குறித்து தமது உரையில் குறிப்பிட்ட அமைச்சர் சான், “உருவாக்கப்படும் வேலைகளில் நமது ஊழியர்களை அமர்த்துவதன் தொடர்பில்தான் நமது கவனம் தொடர்ந்து இருக்கும். மேலும், காலியாக உள்ள வேலைகளுக்கு உள்ளூர் ஊழியரணியைத் தயார்ப் படுத்துவதில் நிறுவனங்கள் அணுக்கமாகப் பணியாற்றும் கடப்பாட்டைத் தொடரும்,” என்றார்.
அடுத்த சில ஆண்டுகளில் உருவாக்கப்படும் 19,000க்கும் மேற்பட்ட வேலைகளில் 45 விழுக்காடு உற்பத்தித் துறையில் அமையும். செயல்முறை பொறியாளர்கள், நிர்வாக உதவியாளர்கள், விநியோகத் தொடர் நிர்வாகிகள் போன்ற வேலைகள் அவற்றுள் அடங்கும்.
நோய்ப் பரவல் சூழலிலும் கடந்த ஆண்டில் அதிக முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்தது