மரீன் பரேடில் திறக்கப்பட்டுள்ள புதிய ஃபேர்பிரைஸ் பேரங்காடி, உள்ளூர் உற்பத்திப் பொருள்களுக்கும் வணிகச் சின்னங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கவுள்ளது.
பார்க்வே பரேடின் மூன்றாம் தளத்தில் அமைந்திருக்கும் அந்த ஃபேர்பிரைஸ் பேரங்காடி, உள்ளூரில் உற்பத்தியாகும் முட்டை, காய்கறி, காளான், மீன் போன்றவற்றுக்கென பிரத்தியேகப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
ஒன்பதாவது ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா பேரங்காடியான இது 44,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.
இதே அளவுள்ள மற்ற பேரங்காடிகளில் 500க்கும் குறைவான உள்ளூர் பொருள்களே இருக்கும் நிலையில், இந்தப் புதிய பேரங்காடியில் 600க்கு மேற்பட்ட உள்ளூர் தயாரிப்புகளைக் காணலாம்.
இப்பேரங்காடியின் இன்றைய அதிகாரபூர்வ திறப்புவிழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வர்த்தக, தொழில் இரண்டாம் அமைச்சர் டான் சீ லேங், உள்ளூர் தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கும்படி குடியிருப்பாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
சிங்கப்பூரின் உணவுப்பொருள் விநியோகத்தையும் மீள்திறனையும் வலுப்படுத்த அது மிகவும் அவசியம் என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் மனிதவள இரண்டாம் அமைச்சருமான டாக்டர் லேங் குறிப்பிட்டார்.
உணவு விநியோக நெருக்கடி ஏற்படும்போது உள்ளூர் தயாரிப்புகள் பெரிதும் கைகொடுக்கும் என்ற அவர், அதுபோல உள்ளூர் தயாரிப்புகளுக்கான தேவையை உருவாக்க வேண்டியதும் முக்கியம் என்றும் சொன்னார்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் ஊட்டச்சத்துத் தேவையில் 30 விழுக்காட்டை இங்கேயே உற்பத்தி செய்ய சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. இப்போது அந்த விகிதம் 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருக்கிறது.