சிங்கப்பூர்-ஜோகூர் பாரு ரயில் இணைப்புத் திட்டம் (ஆர்டிஎஸ்) வரும் 2026ஆம் ஆண்டு இறுதியில் செயல்படத் தொடங்கும்போது, ரயில் கடற்பாலம் வழியாக சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் பாருவுக்குச் செல்லும் பயணிகளுக்கு உட்லண்ட்ஸ் நார்த்தில் உள்ள ரயில் முனையம், குடிநுழைவு வளாகம் ஆகியவை சேவையாற்றும்.
இது சாதாராண எம்ஆர்டி நிலையத்தைக் காட்டிலும் பத்து மடங்கு பெரியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலத்துக்கு அடியில் 28 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்படும் உட்லண்ட்ஸ் நார்த் நிலையத்தில் இரண்டு கீழ்த்தள மாடிகள், சுங்கம், குடிநுழைவு, தனிமைப்படுத்துதல் கட்டடத்தை இணைக்கும் நிலத்தடித் தளம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாடிகள் இருக்கும்.
அது நிலத்தடி சுரங்கப்பாதை வழியாக தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை (டிஇஎல்) நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
அங்குள்ள ரயில் சுரங்கப் பாதைகள், ஜோகூர் நீரிணையைக் கடந்து செல்லும் 25 மீட்டர் உயரமுள்ள ரயில் கடற்பாலத்துடன் இணைக்கப்படும்.
உட்லண்ட்ஸ் நார்த் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் பயணிகள் ஐந்து நிமிடங்களில் ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் ரயில் நிலையத்தைச் சென்றடைவர்.
அந்த ரயில் சேவையில் ஒவ்வொரு திசையிலும் ஒவ்வொரு மணி நேரத்துக்கு 10,000 பயணிகள் பயணம் செய்யலாம்.
உட்லண்ட்சில் அமையவுள்ள ரயில் முனையத்தில் நில அகழ்வு நிகழ்ச்சியின்போது, நிலப் போக்குவரத்து ஆணையம் இந்த 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ரயில் இணைப்புத் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது.
இந்த ரயில் இணைப்புத் திட்டத்தின் வர்த்தக வாய்ப்புகள், அமைப்புமுறை, செலவுகள் ஆகியவற்றைப் பரிசீலிப்பதற்கு மலேசியா விடுத்த கால நீட்டிப்பு அவாகாசத்துக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலையில் ரயில் இணைப்புத் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்க ஜோகூர் கடற்பாலத்தில் சிங்கப்பூரும் மலேசியாவும் ஒரு கூட்டு நிகழ்ச்சியை நடத்தின.
நேற்றைய நில அகழ்வு நிகழ்ச்சியில் உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங், “ரயில் இணைப்புத் திட்டம் மீண்டும் தொடங்குவது இரு நாட்டு மக்களின் இணைப்பையும் உறவையும் வலுப்படுத்துவதற்கான ஒரு மைல்கல்,” என்றார்.
“ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் சாகார் நிலையத்தின் நில அகழ்வை மலேசியா கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி விட்டது. இத்திட்டம் வெற்றிபெற இரு நாடுகளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதாவது 2026 இறுதிக்குள் இத்திட்டத்தை நிறைவுசெய்ய இரு நாடுகளும் கடுமையாக உழைக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆர்டிஎஸ் ரயில் திட்டம் பற்றிய விவரங்களை பொதுமக்கள் மூன்று மாதங்களுக்குப் பார்வையிட ஒரு கண்காட்சியை மலேசியா கடந்த வாரம் தொடங்கியது.
ஜோகூர் கடற்பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் ரயில் இணைப்புத் திட்டத்தின் பயணம் குறைவானதுதான் என்றாலும் அதன் பொருளியல், சமூகப் பலன்கள் குறிப்பிடத்தக்கவை என்றார் திரு ஓங்.
“ரயில் இணைப்புத் திட்டத்தின் நிலையங்கள் உள்ளூர் போக்குவரத்துக் கட்டமைப்புகளுடன் இணைக்கப்படும். ஆர்டிஎஸ், டிஇஎல் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள போக்குவரத்து மையம் உட்லண்ட்சில் அமையும்.
“இந்தப் போக்குவரத்து இணைப்புகளுடன் கொண்ட பெரிய மேம்பாட்டுத் திட்டங்கள் உட்லண்ட்சை, ஜூரோங், தெம்பனிஸ் போன்று முக்கிய வளர்ச்சி மையமாகவும் வேலைவாய்ப்பு நுழைவாயிலாகவும் உருவாக்கும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
இரு நாட்டு நிலையங்களிலும் சிங்கப்பூர், மலேசியாவின் குடி நுழைவு வளாகங்கள் அமைந்திருக்கும் என்பதால் அந்தந்த நாட்டை விட்டு புறப்படும் பயணிகள் ஒருமுறை மட்டுமே குடிநுழைவு செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.