மருத்துவமனை அனுமதிக்கு இட்டுச் செல்லும் கொவிட்-19 தடுப்பூசி பக்க விளைவுகள் ஒருங்கிணைந்த மருந்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன. சிங்கப்பூரில் ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் (IP) 7 காப்புறுதித் திட்ட நிறுவனங்களும் இதனை நடைமுறைப்படுத்துகின்றன.
சிங்கப்பூரின் சுகாதார அறிவியல் ஆணையம் அங்கீகரித்து, சிங்கப்பூரில் போடப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளக்கூடிய, ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வைத்திருக்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என ஆயுள் காப்பீட்டு சங்கம், சிங்கப்பூர் (LIA Singapore) இன்று (ஜனவரி 25) தெரிவித்தது.
இந்த சிறப்பு திட்டம் இவ்வாண்டு இறுதி வரை நடப்பில் இருக்கும்.
அதற்கு மேலும் நீட்டிப்பு தேவைப்பட்டால், சூழ்நிலையைக் கண்காணித்த பிறகு அது பற்றி முடிவெடுக்கப்படும் என சங்கம் தெரிவித்தது.
சிங்கப்பூர் வழக்கநிலைக்குத் திரும்ப, அரசாங்கத்தின் சமூகப் பாதுகாப்புக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாக இந்த காப்பீட்டு விரிவாக்கம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சிங்கப்பூரின் ஆயுள் காப்பீட்டு தொழில்துறை முழு ஆதரவு அளிப்பதாக சங்கத்தின் தலைவர் கோர் ஹாக் செங் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கான செலவுகளும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவதால் சிங்கப்பூரர்களுக்கு மன அமைதி கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பான கேள்விகளுக்கு காப்பீட்டுத் திட்ட வாடிக்கையாளர்கள், தங்களது காப்பீட்டுத் திட்ட பிரதிநிதி அல்லது நிறுவனத்தைத் தொடர்புகொள்ளலாம்.
தற்போது, ஏஐஏ, அவிவா, ஏஎக்ஸ்ஏ, கிரேட் ஈஸ்டர்ன் லைஃப், என்டியுசி இன்கம், புரூடென்சியல், ராஃபிள்ஸ் ஹெல்த் இன்ஷூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்த காப்பீட்டுத் திட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.