தென்னாப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்ல விரும்பும் அமெரிக்க குடிமக்களல்லாதோருக்கு நேற்று முதல் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் பரவு உருமாறிய கொரோனா கிருமி வெகு வேகமாக பரவும் வகையைச் சேர்ந்தது எனவும் அது தடுப்பூசியின் செயல்திறனை வலுவிழக்கச் செய்யக்கூடும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் தடை நடப்புக்கு வருகிறது.
அத்தகைய கொரோனா பரவுவதைத் தடுக்க பல நாடுகள் எல்லைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அண்மையில், ஜான்சன் & ஜான்சன் மற்றும் நோவாவேக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் தங்களது தடுப்பூசிகள் கொவிட்-19க்கு எதிராக வலுவான பாதுகாப்பை நல்குவதாகக் குறிப்பிட்டபோதும், தென்னாப்பிரிக்காவில் அந்த மருந்தின் வீரியம் குறைந்து காணப்பட்டதாகத் தெரிவித்தன. அதிகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய கொரோனா கிருமி தென்னாப்பிரிக்காவில் அதிக அளவில் தொற்று ஏற்படக் காரணமாக இருக்கிறது.
ஃபைசர்-பயோஎன்டெக், மோடர்னா, நோவாவேக்ஸ் ஆகிய நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பூசிகளையும் அந்த வேகமாகப் பரவும் தன்மை கொண்ட உருமாறிய கொரோனா திறன் குன்றச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
B.1.351 எனப்படும் அந்த உருமாறிய கொரோனா கிருமி முதலில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குறைந்தபட்சம் 31 நாடுகளுக்கு அது பரவியுள்ளது. இந்த வாரம் அமெரிக்காவிலும் இருவருக்கு அந்தக் கிருமி பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மெக்சிகோ மற்றும் கரீபிய நாடுகளிலிருந்து சில விமானச் சேவைகளை கனடா தற்காலிகமாக ரத்து செய்திருப்பதாக அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து கனடாவுக்குச் செல்வோர் கிருமித்தொற்று பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் முடிவுகள் வரும் வரை அனுமதிக்கப்பட்ட ஹோட்டலில் தங்களது சொந்த செலவில் தங்கியிருக்க வேண்டும்.
அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு பிரான்ஸ் இன்று முதல் தடை விதிக்கிறது. எல்லை தாண்டி பணிபுரியும் ஊழியர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த பயணிகள் ஆகியோர் தங்களுக்கு கொவிட்-19 இல்லை என்பதற்கான சான்றிதழை நாட்டுக்குள் நுழையும்போது காண்பிக்க வேண்டும் என பிரான்சு நாட்டுப் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் தெரிவித்தார்.
ஜெர்மனியில், அந்நாட்டு குடிமக்களல்லாதோர் போர்ச்சுகல், பிரேசில், தென்னாப்பிரிக்கா, லெஸோதோ, எஸ்வாடினி, பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வர விரும்பினால், அவர்களுக்கு கிருமித்தொற்று இல்லாத நிலையிலும் நாட்டுக்குள் வர அவர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது.
பிரேசில், பிரிட்டன், 27 ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றிலிருந்து வர விரும்புவோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.
பிரிட்டனில் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட B.1.1.7 எனும் உருமாறிய கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் திறம்பட செயல்படுவதாக ஆய்வுகள் காட்டியபோதும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கிருமிக்கு எதிராக தடுப்பூசிகள் ஆற்றல் மிகுந்தவையாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கொரோனா தடுப்பூசி விநியோகம் தடைப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.