டிரேஸ் டுகெதர், சேஃப்என்ட்ரி தரவுகளைக் கடுமையான ஏழு வகை குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குப் பயன்படுத்த வகைசெய்யும் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் தொடர்புகளின் தடமறிதல் அல்லது கொலை, பயங்கரவாதம் போன்ற கடுமையான குற்றங்கள் தவிர்த்து, மற்ற நோக்கங்களுக்கு அந்தத் தரவுகளைப் பொதுத் துறை அமைப்புகள் பயன்படுத்த முடியாது.
மக்கள் சென்று வந்த இடங்கள், பெயர், அடையாள எண், தொடர்பு விவரம் போன்ற தனிப்பட்ட தரவுகளை இந்தப் புதிய கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) (சட்டத்திருத்தம்) மசோதா பாதுகாக்கிறது.
சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகத்தின் சார்பில் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் இந்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
அசாதாரணமான சூழலில் அரசாங்கம் இந்த மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது என்று அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் நேற்று ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.
“தொடர்புகளின் தடமறிதலைத் திறம்பட மேற்கொண்டு, நம்மையும் நம் நாட்டையும் பாதுகாக்க, டிரேஸ்டுகெதர் செயலி அல்லது கருவியை அனைவரும் பயன்படுத்தி, வலுவான ஆதரவைத் தொடர வேண்டியது அவசியம்,” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனிநபர் தொடர்புகளின் தடமறிதல் தரவுகளில் எவையெல்லாம் பயன்படுத்தப்படும் என்பது தொடர்பிலான ஐயத்தைப் போக்கும் வகையில் இந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
தனிநபர் தொடர்புகளின் தடமறிதல் தரவுகளை அனுமதியின்றிப் பயன்படுத்துவதை அல்லது வெளியிடுவதை இம்மசோதா குற்றமாக வகைப்படுத்தி உள்ளது. விதிமீறுவோருக்கு $20,000 வரை அபராதமும் ஈராண்டு வரை சிறைத்தண்டனையும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
முன்னதாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ், குற்றவியல் விசாரணைகளுக்காக டிரேஸ்டுகெதர் தரவுகள் உட்பட சிங்கப்பூர் நீதித்துறையின்கீழ் எந்தத் தரவுகளையும் போலிஸ் பெற முடியும் என்று உள்துறை துணை அமைச்சர் டெஸ்மண்ட் டான் தெரிவித்து இருந்தார். இது, தொடர்புகளின் தடமறிதலுக்கு மட்டும் டிரேஸ்டுகெதர் தரவுகள் பயன்படுத்தப்படும் என்று கடந்த ஆண்டு அரசாங்கம் தெரிவித்ததற்கு முரணாக இருப்பதாகக் கூறி, கூக்குரல் கிளம்பியது. அதைத் தொடர்ந்தே, இந்தப் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தொடர்புகளின் தடம் அறிதலைத் தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றும் அதன்மூலமே கொரோனா நெருக்கடியை சிங்கப்பூர் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்றும் அறிவார்ந்த தேச, மின்னிலக்க அரசாங்க அலுவலகம் தெரிவித்துள்ளது.
டிரேஸ்டுகெதர் மற்றும் பிற மின்னிலக்கத் தொடர்புகளின் தடமறிதல் கருவிகள் மூலம், தொடர்புகளின் தடம் அறிவதற்கான சராசரிக் காலம் நான்கு நாள்களில் இருந்து ஒன்றரை நாளாகக் குறைந்துள்ளதாக அவ்வலுவலகம் குறிப்பிட்டது.
இதுவரை மக்கள்தொகையில் 80 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டோர் டிரேஸ்டுகெதர் கருவியைப் பெற்றுள்ளனர் அல்லது அச்செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.