கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூர் குடும்பங்களுக்குக் கடந்த ஆண்டு மோசமான பாதிப்பு ஏற்பட்டது. ஒட்டுமொத்த சராசரி குடும்ப வருமானம் 2.5 விழுக்காடு குறைந்தது. அது $9,425லிருந்து $9,189க்குச் சரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பணவீக்கத்தைக் கருத்தில் கொண்ட பிறகு, குடும்ப செலவுகளைச் சமாளிப்பதற்கான வருமானம் கடந்த பத்து ஆண்டுகளில் முதல்முறையாக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகக் கடைசியாக உலகளாவிய நிதி நெருக்கடிநிலை ஏற்பட்டபோது குறைந்த குடும்ப வருமானம் கடந்த ஆண்டு 2.4 விழுக்காடு சரிந்தது.
2009ஆம் ஆண்டில் சராசரி மாதாந்திர குடும்ப வருமானம் 1.9 விழுக்காடு குறைந்தது. பணவீக்கத்தைக் கருத்தில் கொண்ட பிறகு, இந்த வீழ்ச்சி 2.5 விழுக்காடாகப் பதிவானது.
கடந்த ஆண்டு குடும்ப வருமானம் குறைந்ததால் குறைந்த வருமானக் குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்பட்டதாக புள்ளிவிவரத் துறை இன்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. குறைந்த வருமானக் குடும்பங்கள் பட்டியலில் கடைசி 10 விழுக்காடு குடும்பங்களின் வருமானம் 6.1 விழுக்காடு குறைந்தது.
மற்ற குடும்பங்களின் வருமானம் 1.4 விழுக்காட்டிலிருந்து 3.2 விழுக்காடு வரை குறைந்தது.
ஆனால் அரசாங்கம் வழங்கிய பெருமளவிலான ஆதரவு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியது.
குறிப்பாக, சிறிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட்டதாக புள்ளிவிவரத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக சராசரி குடும்ப வருமானம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
2015ஆம் ஆண்டிலிருந்து குடும்ப செலவுகளைச் சமாளிப்பதற்கான வருமானம் ஒரு விழுக்காடு அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு குடும்ப உறுப்பினரின் சராசரி மாதாந்திர வருமானம் 2019ஆம் ஆண்டில் $2,925ஆக இருந்தது.இந்தத் தொகை கடந்த ஆண்டு $2,886ஆக குறைந்தது.மாறாக, ஒட்டுமொத்த அடிப்
படையில் 2015ஆம் ஆண்டிலிருந்து கடந்த ஆண்டு வரை இந்தத் தொகை 14.6 விழுக்காடு அதிகரித்தது.