ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவளித்த திட்டங்கள் மூலம் கடந்த ஆண்டு ஏறக்குறைய 540,000 சிங்கப்பூரர்கள் பலனடைந்தனர். 2019ஆம் ஆண்டைவிட இந்த எண்ணிக்கை 40,000 அதிகம்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் நேற்று வெளியிட்ட அதன் வருடாந்திர மறுஆய்வு அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்தது. இத்திட்டங்கள் மூலம் கடந்த ஆண்டு 14,000 தொழில் நிறுவனங்கள் பலனடைந்தன. 2019ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த எண்ணிக்கையில் மாற்றம் எதுவும் இல்லை.
தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் மீது கொவிட்-19 ஏற்படுத்திய தாக்கத்திற்குப் பதில் நடவடிக்கையாக புதிய நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டதாகவும், ஏற்கெனவே உள்ள திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டதாகவும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் தெரிவித்தது.
தனிநபர்களுக்குப் பயிற்சி வாய்ப்புகளை வழங்க ‘எஸ்ஜி யுனைடெட்’ திறன் மேம்பாட்டுத் திட்டமும் ‘எஸ்ஜி யுனைடெட்’ பணி இடைக்காலத் திட்டமும் தொடங்கப்பட்டன.
கடந்த ஆண்டு டிசம்பர் நிலவரப்படி, இந்தத் திட்டங்களில் ஏறத்தாழ 9,800 பேர் சேர்ந்தனர்.
தகவல் தொடர்புத் தொழில்நுட்பம் மற்றும் ஊடகம், நிபுணத்துவச் சேவைகள், உற்பத்தித்துறை மற்றும் சுகாதாரப் பராமரிப்புத் துறைகளைச் சேர்ந்த அதிகமானோர் இத்திட்டங்களில் சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு 188,000 சிங்கப்பூரர்கள் தங்களது ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தினர். 2019ஆம் ஆண்டில் 156,000 பேர் இதைப் பயன்படுத்தியிருந்தனர்.
கடந்த ஆண்டு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் ஆலோசனைப் பயிலரங்குகள் ஏறத்தாழ 22,000 பேருக்குச் சேவையாற்றின. 2019ல் இந்த எண்ணிக்கை 54,000க்கும் அதிகமாக இருந்தது.
தொழில் நிறுவனங்கள், குறிப்பாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மீதும் கவனம் செலுத்தப்படுவதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் கூறியது. வேலையிட கற்றலுக்கான உன்னத தேசிய நிலையம் அறிமுகம் கண்டதைத் தொடர்ந்து ஏறக்குறைய 180 தொழில் நிறுவனங்கள் ஆண்டுதோறும் இதுகுறித்த திட்டங்களில் சேர்ந்து வேலையிட கற்றல் நடைமுறைகளைச் செயல்படுத்தின.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் தொழில் நிறுவன உதவித்தொகை திட்டத்தின்கீழ் பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற ஏறக்குறைய 3,400 நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அனுப்பிவைத்தன.
கல்விக்கழகங்களைப் பொறுத்தமட்டில், தொழில்நுட்பக் கல்விக் கழகம், பலதுறைத்தொழிற்கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் வேலை-கல்வித் திட்டங்களில் தொடர்ந்து பங்கேற்றதாக ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சிங்கப்பூர் கூறியது.
கடந்த ஆண்டு 590 நிறுவனங்கள் இத்திட்டங்களில் பங்கெடுத்தன. மாணவர்கள் கல்வியை மேற்கொள்ளும் அதே வேளையில் வேலை அனுபவத்தைப் பெற 1,700 பேருக்கு வேலைப் பயிற்சி இடங்களை அந்நிறுவனங்கள் வழங்கின.