சிங்கப்பூரில் மேல்நிலைத் தேர்வு (A level) முடிவுகள் அடுத்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 19) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் வெளியாகும் என கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டுக் கழகமும் (SEAB) இணைந்து இன்று (பிப்ரவரி 10) வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கிறது.
கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை வகுப்பறைகளில் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்வோர் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என்றது அறிக்கை.
உடல் நலம் இல்லாத, தனிமைப்படுத்தலுக்கோ அல்லது வீட்டிலேயே தங்கியிருக்கும் ஆணைக்கோ உட்படுத்தப்பட்டிருக்கும் மாணவர்கள் அன்றைய தினம் பள்ளிக்குச் செல்லக்கூடாது. மாறாக, அவர்கள் SEABயின் இணையப் பக்கத்தில் தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
பிப்ரவரி 19 முதல் மார்ச் 5 தேதி வரை மாணவர்கள் அந்த இணையப்பக்கத்தில் தேர்வு முடிவுகளைக் காணலாம். பிப்ரவரி 19 அன்று பிற்பகல் 3.15 மணியளவில் இணையத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்.
மாணவர்களின் சார்பில் மதிப்பெண் சான்றிதழ்களைப் பள்ளிகளில் பெற விரும்புவோர் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து பிப்ரவரி 23ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைப் பெறலாம்.
தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அஞ்சல் மூலம் பெறுவர். பிப்ரவரி 19 அன்று அஞ்சல் அனுப்பப்படும். தனித்தேர்வர்களும் மேற்குறிப்பிட்டவாறு இணையம் வழி தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.