சிங்கப்பூரின் பெருமைக்குரிய நிறுவனங்களில் ஒன்றான சிங்கப்பூர் ஏர்லைன்சின் விமானம் ஒன்று, முதல் முறையாக தடுப்பூசி போட்ட விமானி மற்றும் சிப்பந்திகளுடன் இன்று (பிப்ரவரி 11) காலை 9.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
கொவிட்-19 கிருமித் தொற்றுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் எஸ்ஐஏ, இதனை முக்கிய மைல்கல்லாக பார்க்கிறது.
எஸ்கியூ956 விமானம் 12 விமானச் சிப்பந்திகளுடன் ஜகார்த்தாவுக்குப் புறப்பட்டது.
அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை இரு முறை போட்டுக் கொண்டனர்.
தொடக்கமாக, எஸ்ஐஏ குழுமத்தைச் சேர்ந்த மூன்று விமானங்கள், தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் புறப்பட்டுச் சென்றுள்ளன. டிஆர்606 எனும் ஸ்கூட் விமானம், தடுப்பூசி போட்டுக் கொண்ட 11 விமான ஊழியர்களுடன் அதே 9.30 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து பேங்காக்குக்குப் புறப்பட்டது.
சில்க் ஏர் நிறுவனத்தின் எம்ஐ608 விமானமும் தடுப்பூசி போட்ட எட்டு ஊழியர்களுடன் இன்று மாலை நோம்பென் நகருக்குச் சென்றது.
போக்குவரத்து துறையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 52,000 ஊழியர்களில் இவர்களும் அடங்குவர் என்று போக்குவரத்து அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இம்மாதம் 10ஆம் தேதி இவர்களுக்கு முதல் முறை போடப்படும் தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை, விமானத்துறை மற்றும் கடற்துறையைச் சேர்ந்த 39,000 ஊழியர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறையைச் சேர்ந்த மேலும் 14,000 களப் பணியாளர்களுக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் இதர 66,000 பேருக்கு அடுத்து வரும் மாதங்களில் தடுப்பூசி போடப்படும் என்றும் அமைச்சு கூறியது.
கொள்ளைநோய் காரணமாக பில்லியன் வெள்ளிக்கு மேல் இழப்புகளைச் சந்தித்திருக்கும் எஸ்ஐஏ குழுமம், உலகிலேயே முதல் முறையாக தடுப்பூசி போட்டுக் கொண்ட ஊழியர்களுடன் விமானத்தை இயக்கியிருப்பதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு தமிழ் முரசின் நாளைய அச்சுப் பிரதியை நாடுங்கள்!