ஒரு நாள் பயணமாக நேற்றுக் காலை தமிழகம் வந்த பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நலத்திட்டங்களை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார்.
அப்போது, தமிழக விவசாயிகள் நீராதாரங்களை சிறப்பாக பயன் படுத்தி வருவதாக அவர் குறிப் பிட்டார்.
"நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் தமிழகம் சாதனை படைத்துள்ளது," என்று அவர் பாராட்டினார்.
கல்லணை கால்வாய் சீரமைக்கப் பட்டு புதுப்பிக்கப்படுவதால் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் பயனடையும் என்று கூறிய திரு மோடி, "வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்' என்ற ஒளவையார் பாடலை மேற்கோள் காட்டினார்.
"கொரோனா காலத்திலும் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது. சிறந்த போக்குவரத்து சேவைகள் வணிகத்தைப் பெருக்க உதவும். மின்மயமாக்கப்பட்ட ரயில் தடங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமை யும்," என்றார்.
'ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்; ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்' என்ற மகாகவி பாரதியின் பாடலையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
பிரதமர் மோடி, 'வணக்கம் சென்னை', 'வணக்கம் தமிழ்நாடு', 'ெசன்னை அறிவும் ஆற்றலும் நிரம்பிய நகரம்' என்று கூறி தமது உைரயைத் தொடங்கியிருந்தார்.
முன்னதாக புதிய 'அர்ஜூன் மார்க்-1ஏ' ராணுவ பீரங்கியை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
சென்னை ஆவடியில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் பீரங்கி, இரவு, பகல் எந்த நேரத்திலும் இலக்கை துல்லியமாக தாக்கக்கூடியது. 360 டிகிரி சுழன்று தாக்கும் திறன் கொண்டது. காலை 11 மணியளவில் சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐஎன்எஸ் அடையார் கடற்படை தளத்துக்கு ஹெலிகாப்டர் மூலம் வந்த பிரதமர் மோடியை ஆளுநர், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வரவேற்றனர்.
விழா மேடையில் பிரதமர் மோடிக்கு பொன்னாடை அணி வித்து கௌரவித்த முதல்வர் பழனிசாமி, அவருக்கு கிருஷ்ணர் சிலையை நினைவுப் பரிசாக அளித்தார்.
மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உருவப் படங்களுக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவேற்புரையாற்றினார்.
அடுத்த சில மாதங்களில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் வேளையில் தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி.
நேரு விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் பழனிசாமியை அவர் தனியாக அழைத்துப் பேசினார்.
சுமார் பத்து நிமிடங்கள் இந்த ஆலோசனை நீடித்தது. அப்போது துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உடன் இல்லை.
அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து இருவரும் பேசியிருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.
பிரதமர் மோடி, இம்மாதம் 25ஆம் தேதி மீண்டும் தமிழகம் வரவிருக்கிறார்.