சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் முன்னாள் தலைமை குருக்கள் மீது தங்க நகைகளைக் கையாடியதாக நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் சொந்தமான நகைகள் தொடர்பில் மோசடி செய்ததாக இந்திய நாட்டவரான 37 வயது கந்தசாமி சேனாபதி மீது நம்பிக்கை மோசடி தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும் அத்தகைய குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பலனை அனுபவித்ததன் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
குற்றங்களை 2016ஆம் ஆண்டுக்கும் சென்ற ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் புரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கையாடியதாகக் கூறப்படும் நகைகளின் அடமான மதிப்பு $2 மில்லியனுக்கும் மேல் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்குக் கிடைத்த பணத்தில் $140,000க்கு மேல், கந்தசாமி சேனாபதி தன் சொந்த காரணங்களுக்காக பயன்படுத்திக்கொண்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ‘ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா’, ‘இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்’ போன்ற நிதி மையங்களின் மூலம் கந்தசாமி சேனாபதி அந்த பணத்தை இந்தியாவுக்கு அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது.
நகைகள் அனைத்தும் சரியாக இருக்கின்றனவா என்பதைச் சரிபார்த்து உறுதிசெய்ய, காலக்கிரம முறைப்படி கோயிலில் சோதனைகள் நடக்கும். அவ்வாறு, நகைகளைச் சென்ற ஆண்டு சரிபார்த்தபோது அவற்றில் சிலவற்றைக் காணவில்லை. அதையடுத்து, தலைமை குருக்களாக இருந்த கந்தசாமி சேனாபதியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
நகைகள் காணாமல் போனதைப் பற்றி ஆலயம் அறிந்ததும் கந்தசாமி சேனாபதியை வேலையிலிருந்து நீக்கிவிட்டதாக இந்து அறக்கட்டளை வாரியம் நேற்று தெரிவித்தது.
கந்தசாமி சேனாபதி அதற்குப் பின் சிறப்பு அனுமதியுடன் இங்கு இருப்பதாகவும் கூறப்பட்டது.
கையாடிய நகைகளை கந்தசாமி சேனாபதி மீட்டு ஆலயத்திடம் ஒப்படைத்துவிட்டார். இருப்பினும் அவர் மீது போலிசில் புகார் அளிக்கப்பட்டது.
கந்தசாமி சேனாபதி $100,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு மார்ச் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நிரூபிக்கப்படும் நம்பிக்கை மோசடிக் குற்றசாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் விதிக்கப்படலாம்.
குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தின் பலனை அனுபவித்தது நிரூபிக்கப்பட்டால், அத்தகைய ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை, $500,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.