எஸ்ஜி ஒற்றுமை வேலைகள் மற்றும் திறன்கள் தொகுப்புத் திட்டத்தின்கீழ் இவ்வாண்டு 200,000 உள்ளூர்வாசிகளுக்கு வேலை வழங்கி ஆதரிக்க இலக்கு வகுக்கப்பட்டுள்ளது.
35,000 பயிற்சிகளையும் பயிற்சி வாய்ப்புகளையும் நடப்பாண்டில் வழங்கும் வகையில் இந்தத் தொகுப்புத் திட்டம் புதுப்பிக்கப்படுகிறது. கொவிட்-19 கொள்ளை
நோயால் ஊழியர் சந்தை வீழ்ச்சி அடைந்துவிடாது தடுக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்நடவடிக்கை நாட்டின் தொழில்துறை உருமாற்றத்திற்கு அத்தியாவசியமான ஒன்று.
தொகுப்புத் திட்டம் செயல்படத் தொடங்கியது முதல் கடந்த ஆண்டு இறுதி வரை ஏறக்குறைய 76,000 பேர் வேலை, பயிற்சி, திறன் பயிற்சி போன்றவற்றைப் பெற்றுள்ளனர். இதற்கு வேலை வளர்ச்சி ஊக்கத்தொகைத் திட்டம் கைகொடுத்தது. ஆள் நியமனத்தை நிறுவனங்கள் மேற்கொள்ள சம்பள மானியம் வழி இத்திட்டம் ஊக்குவிக்கிறது. இத்திட்டம் நடப்புக்கு வந்த இரு மாதங்களிலேயே வேலைதேடிய 110,000 உள்ளூர்வாசிகளுக்கு இதன் மூலம் பலன் கிட்டியது.
இதனைத் தொட்டுப் பேசிய துணைப் பிரதமர் ஹெங், “நிறுவனங்களும் தொழில்துறையும் உருமாற்றம் கண்டுவரும் நிலையிலும் புதிய வளர்ச்சி அம்சங்கள் உருவெடுக்கும் நிலையிலும் அவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் திறன்களையும் செயல்பாடுகளையும் நமது மக்கள் பெற்றிருப்பது அவசியம். மேலும் வலிமையுடன் மீண்டெழ நமது மக்களுக்கு புதிய அறிவாற்றலும் திறன்களும் தேவை,” என்றார்.
வேலைகள், திறன்கள் தொகுப்புத் திட்டத்திற்கு இரண்டாவது தவணையாக $5.4 பில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கப்படுவதாகவும் கடந்த ஆண்டு இதற்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட தொகை $3 பில்லியன் எனவும் அவர் கூறினார். இந்த ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் வேலை வளர்ச்சி ஊக்கத்தொகைத் திட்டத்திற்கு $5.2 பி. பயன்படுத்தப்படும். வேலைக்கு ஆள் நியமன நடவடிக்கையை செப்டம்பர் 30 வரை ஏழு மாதம் தொடர இது உதவும்.
தகுதியுள்ள உள்ளூர்வாசிகளை வேலையில் நியமிக்கும் நிறுவனங்களுக்கு அவர்கள் நியமிக்கப்பட்ட மாதம் முதல் 12 மாதங்களுக்கான சம்பள ஆதரவை இந்த விரிவாக்கம் அளிக்கும். அதேநேரம் முதிர்ச்சியடைந்தோர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் சிறைக் கைதிகள் போன்றோரை வேலைக்கு அமர்த்தினால் 18 மாதங்களுக்கு மேம்படுத்தப்பட்ட சம்பள ஆதரவை இது வழங்கும். மேலும், எஸ்ஜி ஒற்றுமை திறன்கள், எஸ்ஜி ஒற்றுமை பயிற்சி, எஸ்ஜி ஒற்றுமை பணியிடைக்கால வாழ்க்கைத்தொழில் போன்ற திட்டங்கள் வேலையில் அமருமுன் கூடுதல் உதவி தேவைப்படும் ஊழியர்களுக்கும் நீட்டிக்கப்படும் என்றார் திரு ஹெங்.