2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோமீட்டருக்கு நீட்டிப்பு
சிங்கப் பூரின் வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ள 20க்கும் மேற்பட்ட சாலைகளின் பகுதிகளை, மிதி வண்டி ஓட்டுவதற்கான பாதைகளாக மாற்றும் சாத்தியம் ஆராயப்பட்டு வருகிறது. இந்த அளவில் நிகழ்த்தப் படும் முதல் ஆய்வு இதுவே என்று கூறப்படுகிறது.
அல்ஜுனிட் சாலை, பிராடல் சாலை, அப்பர் சிராங்கூன் சாலை, அப்பர் பாய லேபார் சாலை, மெக்பர்சன் சாலை போன்ற அதிகம் பயன்படுத்தப்படும் சாலைப்பகுதிகளும் இந்த ஆய்வுக்கு உட்பட்டவை.
திட்டம் கைகூடி வந்தால், அமைய உள்ள கூடுதல் பாதைகளுடன் தற்போதுள்ள 460 கிலோமீட்டர் மிதிவண்டித் தொலைவு, 2030ஆம் ஆண்டுக்குள் 1,300 கிலோமீட்டராக நீட்டிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரின் மிதிவண்டிப் பாதைக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் தேசிய திட்டத்தின் ஓர் அங்கமான இது, மிதிவண்டி ஓட்டுநர்களுக்கு மேலும் வசதியாக, பாதுகாப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சாலைப் பகுதிகளை மிதிவண்டிப் பாதைகளாக மாற்றுவது தொடர்பில் பெரிதளவில் நடத்தப்படும் போக்குவரத்து ஆய்வு இதுவே என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தேசமாக சிங்கப்பூர் மாறும் இலக்கை நோக்கிச் செல்வதற்கு இத்திட்டமும் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
கிழக்குப் பகுதியில் மிதிவண்டிப் பாதைகளை வடிவமைக்கவும் அதன் தொடர்பான உள்கட்டமைப்பை உருவாக்கவும் பொறியியல் ஆலோசனைச் சேவைகளை நிலப் போக்குவரத்து ஆணையம் நாடுவதாக குத்தகை ஆவணங்கள் தெரிவித்துள்ளன.
இப்பாதைகளை 2030ஆம் ஆண்டுக்குள் உருவாக்கிடும் திட்டங்கள், மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். இதுபோன்ற கட்டமைப்புகளை அடுத்த பத்து ஆண்டுகளில் விரிவுபடுத்துவதால் குறிப்பிடத்தக்க அளவில் ஒரு சில குடியிருப்பு வட்டாரங்கள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வகையில், கேலாங்கில் கூடுதலாக 29.5 கிலோமீட்டர் மிதிவண்டிப் பாதைகள், செங்காங்கில் 28.3 கிலோமீட்டர், ஹவ்காங்கில் 28.2 கிலோமீட்டர், சிராங்கூனில் 27.6 கிலோமீட்டர் என மிதிவண்டிப் பாதைகள் அமையவுள்ளதாகக் கூறப்படுகிறது.
சாத்தியமானால் தொழிற்பேட்டை வட்டாரங்களான பாசிர் ரிஸ், தெம்பனிஸ், பீஷான் வட்டாரங்களிலும் இப்பாதைகள் அமைக்கப்படலாம்.
திட்டமிடப்படும் இப்புதிய பாதைகள், தற்போதுள்ள பாதைகளுடன் ஒழுங்காக இணைய வேண்டும் என்று குறிப்பிட்டது ஆணையம்.
இதற்காக தற்போதுள்ள சாலைகள், சாலைச் சந்திப்புகள், வசதிகள் போன்றவை மாற்றி அமைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மிதிவண்டிப் பாதைக்கான திட்டங்களால் சுற்றியுள்ள சாலைகளின் போக்குவரத்தில் ஏற்படக்கூடிய தாக்கமும் ஆராயப்படும் என்றது ஆணையம்.