துவாஸில் நேற்று நடந்த வெடிப்புச் சம்பவத்தில் மூன்று ஊழியர்கள் மரணமடைந்தனர் . ஐந்து பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
எண் 32E துவாஸ் அவென்யூ 11 முகவரியில் நடந்த சம்பவத்திற்கு எதிரில் உள்ள இடத்தின் ஊழியர்கள் இருவர் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்பினர்.
இன்று சம்பவ இடத்திலிருந்து மனிதவள அமைச்சு இந்தத் தகவல்களை வழங்கியது.
தீ பாதுகாப்புச் சாதனங்களைத் தயாரிக்கும் 'ஸ்டார் எஞ்சினியரிங்' நிறுவனத்தின் வளாகத்தில் அந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டது. தீப் பற்றிய நிலையில் அதைச் சுற்றிய பகுதிகளிலிருந்து 65 பேர் வெளியேற்றப்பட்டனர்.
அந்த இடத்தில் உள்ள தங்குவிடுதிகளில் வசித்த அந்த ஊழியர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
தீக்காயங்கள் மிகுதியாக இருந்த நிலையில் இன்னும் அந்த மூன்று சடலங்கள் அடையாளம் தெரியவில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்தது.
அடையாளம் தெரிந்ததும் அதிகாரிகள் அவர்களின் குடும்பங்களுக்குத் தகவல் தெரிவிப்பார்கள்.
நெருக்கடியான இடத்தில் உருளைக்கிழங்கு கஞ்சிப்பசை அதிகளவில் தேக்கிவைக்கப்பட்டிருந்ததே வெடிப்புக்கான காரணம் என்று அமைச்சின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.