வாழ்க்கை, வேலைகள் மேம்பட உற்பத்தித்திறன் வளரவேண்டும்
தங்களது வளர்ச்சிக்கேற்ப ஊழியர்களை நியமிக்கும் வகையில் உருமாறும் நிறுவனங்களின் உற்பத்தித்திறன் உயர வேண்டும் என்றும் அந்த உயர்வால் மட்டுமே சிங்கப்பூரர்களின் வேலைகளையும் வாழ்க்கையையும் தொடர்ந்து முன்னேற்ற இயலும் என்றும் துைணப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
மக்களின் முன்னேற்றம்தான் நாட்டின் பொருளியல் வளர்ச்சியின் அடிப்படை நோக்கம் என்றும் அவர் நேற்று நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டார். வரவுசெலவுத் திட்ட அறிக்கை மீதான கருத்துகளை வெளிப்படுத்திய உறுப்பினர்களுக்கு திரு ஹெங் பதிலளித்துப் பேசினார்.
“நாடு உடனடி சவால்களைச் சமாளித்து வரும் சூழலிலும் சிங்கப்பூரின் இடைக்கால, நீண்டகால பொருளியலுக்குத் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதனைத் தழுவியே அடுத்த மூன்றாண்டுகளுக்கு ஊழியர்களும் வர்த்தகங்களும் உருமாற்றம் காண $24 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், உலகச் சந்தையில் சிங்கப்பூரின் ஊழியர்களும் நிறுவனங்களும் தனித்துவமான பலனை பெறவும் இந்நடவடிக்கை உதவும்,” என்றார் நிதி அமைச்சருமான திரு ஹெங்.
அங் மோ கியோ குழுத்தொகுதி உறுப்பினர் டாக்டர் கோ போ கூன் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் ஊழியர், நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து முக்கியமாகக் குறிப்பிட்டுப் பேசினர். அவர்களின் கருத்தை ஒத்துக்கொண்ட திரு ஹெங், நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையிலான தற்போதைய நல்லுறவு முன்னெப்போதும் இல்லாத வகையில் பிரிக்க முடியாத வகையில் அமைந்திருப்பதாகச் சொன்னார்.
அதேபோல ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி உறுப்பினர் ஜெசிகா டான் உள்ளிட்ட உறுப்பினர்களின் கருத்தை ஒட்டிப் பேசிய துணைப் பிரதமர், வலுவான சிங்கப்பூர் மூலாதாரத்தைக் கட்டியெழுப்புவது என்பதே அரசாங்கத்தின் அணுகுமுறையில் இடம்பெற்றுள்ள அடிப்படை அம்சம் என்றார்.
தொழிற்சங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வலுவாக இயங்குதல் என்னும் போக்கை வலுவுடன் மீண்டெழுதல் என்பதை நோக்கி சிங்கப்பூர் முன்னோக்கிச் செல்வது குறித்து கருத்துகளை வெளிப்படுத்தினர். அப்போது பேசிய திரு ஹெங், “நமது ஒட்டுமொத்தத் திறன்கள் மற்றும் ஒற்றுமையின் வலுவே ஒரு பொருளியல் நாடாக, ஒரு சமூகமாக எவ்வளவு காலத்துக்கு நாம் முன்னேறிச் செல்வோம் என்பதைத் தீர்மானிக்கும்,” என்றார்.
“கொவிட்-19 கொள்ளைநோயும் புதியவகைக் கிருமிப் பரவலும் உலகப் பொருளியலில் நிச்சயமற்ற தன்மையையும் சிக்கல்களையும் உருவாக்கி வரும் வேளையில் சிங்கப்பூரின் கிருமிப் பரவல் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சிங்கப்பூரின் பொருளியல் படிப்படியாக மீளும். வெவ்வேறு துறைகள் வெவ்வேறு வளர்ச்சியைக் காணும். 2021ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 விழுக்காட்டுக்கும் 6 விழுக்காட்டுக்கும் இடைப்பட்டு இருக்கும் என்று கணிக்கப்பட்டு உள்ளது,” என்றும் திரு ஹெங் கூறினார்.
செல்வ வரி உயர்வு பரிசீலனை
சிங்கப்பூரின் செல்வ வரிகளை மேலும் மறுஆய்வு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அதுபோன்ற தீர்வைகளை புகுத்துவது ஜிஎஸ்டி (பொருள் சேவை வரி) உயர்த்தப்படுவதற்கு மாற்றாக அமையாது என்றும் திரு ஹெங் தெரிவித்துள்ளார்.
செல்வ வரிகளை உயர்த்துவது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “இதுபோன்ற வரிகள் சிங்கப்பூருக்குப் புதிதல்ல. காலம் காலமாக செல்வம் தொடர்பான வரிகளின் அடுத்தடுத்த நிலை உயர்த்தப்பட்டு வந்துள்ளது,” என்றார்.
வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்து துணைப் பிரதமர் ஹெங் உரை
ஜிஎஸ்டி உயர்வின் அவசியம்
சுகாதாரப் பராமரிப்பு போன்ற முக்கிய அம்சங்களிலும் மேலும் கூடுதலான சமூகப் பாதுகாப்பு கட்டமைப்புகளிலும் உயர்ந்து வரும் செலவுகளை ஈடுகட்ட ஜிஎஸ்டி உயர்த்தப்பட வேண்டி உள்ளது. 2011 நிதி ஆண்டில் $3.9 பில்லியனாக இருந்த சுகாதாரப் பராமரிப்புக்கான வருடாந்திர செலவு, 2019ஆம் ஆண்டில் $11.3 பில்லியனாக உயர்ந்துவிட்டது.
வேலை பாதுகாப்பு என்பது...
வேலை பாதுகாப்பு என்பது வேலைத்திறனோடு நீடிப்பதைக் குறிக்குமே தவிர ஒரே வேலையில் நீடிப்பதைக் குறிக்காது. பொதுமக்கள் புதிய திறன்களைப் பெறவும் எதிர்கால வேலைகளுக்குத் தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ளவும் உகந்த நிலைகளை அரசாங்கம் தொடர்ந்து பலப்படுத்தும்.
‘கொவிட் தலைமுறை’ தவிர்ப்பு
2019ஆம் ஆண்டின் நிலவரத்தோடு ஒப்பிடுகை யில் முழுநேர நிரந்தர வேலைவாய்ப்பு கிட்டத் தட்ட 10 விழுக்காடு குறைந்தபோதிலும் இந்த ஆண்டில் உயர் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெறுவோருக்கான ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு கடந்த ஆண்டுகளைப் போலவே உள்ளது. தன்னாட்சி பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் 94 விழுக்காட்டினர் கடந்த ஆண்டு ஆறு மாதங் களில் வேலையில் அமர்ந்தனர். 2019ல் இது 91 விழுக்காடாக இருந்தது. மனித மூலதனத்தைப் பாதுகாத்து அவர்களின் வேலைத்திறனை உயர்த்தியதன் மூலம் ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் ‘கொவிட் தலைமுறை’ உருவாகாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.