சிங்கப்பூரில் கடந்த ஆண்டு 21,000 பேருக்கு புதிய சிங்கப்பூர் குடியுரிமையும் 27,500 பேருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியும் வழங்கப்பட்டது.
புதிய சிங்கப்பூர் குடிமக்களில் வெளிநாட்டில் சிங்கப்பூர் பெற்றோருக்குப் பிறந்த 1,300 குழந்தைகளும் அடங்கும்.
இந்த விவரங்களை நேற்று நாடாளுமன்றத்தில் வெளியிட்டு பேசிய பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கொவிட்-19 கிருமித்தொற்றின் தொடர்பில் அறிவிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள், நடைமுறை விவகாரங்கள் காரணமாக மேற்கண்ட புள்ளி விவரங்கள் குறைந்தன என்றார்.
சுமார் 31,700 பேருக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியும் 22,100 பேருக்கு சிங்கப்பூர் குடியுரிமையும் 2015 முதல் 2019 வரை ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக வழங்கப்பட்டு வந்தன.
அதில் அந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டில் சிங்கப்பூர் பெற்றோருக்குப் பிறந்த 1,600 குழந்தைகளும் அடங்கும்.
பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளால், சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதிக்கும் சிங்கப்பூர் குடி யுரிமைக்குமான கடைசிக் கட்ட பதிவுக்குக் குறைவான இடங்களே ஒதுக்கப்பட்டன.
அதற்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாகச் செல்ல வேண்டும் என்பதே காரணம்.
அதனால், கொள்கை அளவில் ஒப்புதல் பெற்ற விண்ணப்பதாரர்கள் கடந்த ஆண்டு இறுதிக்குள் அந்த விண்ணப்பத்துக்கான முழுமையான முறைகளை நிறைவு செய்ய முடியாமல் போனது என்றும் அமைச்சர் விளக்கினார்.
"கொவிட்-19 நிலைமையைப் பொறுத்து இந்த விண்ணப்பதாரர்களுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசத் தகுதியும் சிங்கப்பூர் குடியுரிமையும் வரும் மாதங்களில் வழங்கப்படும்.
"அரசாங்கம் தொடர்ந்து குடிநுழைவு நடைமுறைகளின் வேகத்தைக் கவனமாக வழிநடத்தும். குடியேறிகள் எவ்வாறு சிங்கப்பூருக்குப் பங்களிக்க முடியும் என்பதை மட்டும் பார்க்காமல், அவர்கள் சிங்கப்பூர் மக்களுடன் எவ்வாறு ஒருங்கிணைய முடியும் என்பதும் ஆராயப்படும்," என்றும் அமைச்சர் இந்திராணி ராஜா விளக்கம் அளித்தார்.

