மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீயால் சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று காலை புகைமூட்டம் ஏற்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.
ஜோகூர் காட்டுப் பகுதியில் தீ ஏற்பட்டதை மலேசிய அதிகாரிகள் நேற்று பிற்பகல் கண்டுபிடித்தனர். அங்கிருந்து சிங்கப்பூரை நோக்கி காற்று வீசியதால் சிங்கப்பூரில் புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
காற்றின் திசை இதே மாதிரி அடுத்த சில நாட்களுக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சிங்கப்பூரின் மற்ற பகுதிகளிலும் புகைமூட்டம் ஏற்படும் சாத்தியம் இருப்பதாக வாரியம் அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேடு குறியீடு 61-74 என மிதமான நிலையில் இருந்தது.
புகைமூட்டம் மோசமடைந்தால் முதியோர், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் உட்பட எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள் வெளிப்புறங்களில் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.