வரலாற்றிலேயே மிகப் பெரிய தடுப்பூசி இயக்கம் உலகில் தற்போது நடந்து வருகிறது. புளும்பெர்க் நிறுவனத்தின் தரவுகளின்படி, 108 நாடுகளில் 265 மில்லியனுக்கும் அதிக அளவிலான தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளன.
அண்மைய விகிதத்தின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 6.14 மில்லி யன் அளவு தடுப்பூசி மருந்து போடப்படுகிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள் பெரும்பாலான மக்களுக்குத் தடுப்பூசி போட நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன.
அமெரிக்கா, நாட்டிலுள்ள பெரியவர்கள் அனைவருக்கும் போதுமான தடுப்பூசி மருந்தை வரும் மே மாத இறுதிக்குள் பெற்றிருக்கும் என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஃபைசர், மொடர்னா ஜான்சன்& ஜான்சன் ஆகிய மூன்றுவித தடுப்பூசிகள் உள்ள நிலையில், 100 நாட்களில் 100 மில்லியன் தடுப்பூசி அளவை வழங்குவதற்கான தனது இலக்கை நாடு அடையும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
தடுப்பூசிகளைப் பெற்றதும் அமெரிக்கர்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்வதே முக்கியம் என்ற அவர், "எவ்வளவு பேர் தடுப்பூசி பெறுகிறார்களோ அவ்வளவு விரைவாக கிருமிப் பரவலைச் சமாளிக்க முடியும்," என்றார்.
அமெரிக்காவில் கொரோனா கிருமியால் 2020ஆம் ஆண்டில் 515,000க்கும் அதிகமான மரணங்கள் ஏற்பட்டன. அங்கு இதுவரை 22 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டுள்ளது.
இங்கிலாந்து 'சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா' தயாரித்த 10 மில்லியன் ஆஸ்ட்ரஸெனெகா தடுப்பூசி அளவை பெறும் என்று அந்நாடு செவ்வாய்க்கிழமை கூறியது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான இந்நிறுவனம், ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய ஆஸ்ட்ரஸெனெகா தடுப்பூசியை ஏராளமான ஏழை, நடுத்தர வருமான நாடுகளுக்காக பெருமளவில் உற்பத்தி செய்கிறது.
உலக சுகாதார நிறுவனம் அடுத்த மூன்று மாதங்களில் 140க்கும் மேற்பட்ட குறைந்த, நடுத்தர வருமான நாடுகளுக்கு 238 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் 'கோவாக்ஸ்' திட்டத்தில் பங்குபெறும் 92 ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும்.
சீனா ஜூன் மாதத்திற்குள் அதன் மக்கள் தொகையில் 40 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் கூறினர். பிப்ரவரி கடைசி நிலவரப்படி 52.52 மில்லியன் அளவு தடுப்பூசிபோடப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையத்துடன் இணைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் தலைவர் ஜாங் நன்ஷன் கூறினார்.
கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட சீனா, மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தடுப்பூசி போடுவதில் மெதுவாகவே செயல்படுகிறது. இதுவரை 100 பேருக்கு 3.56 அளவு என்ற விகிதத்திலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்று ஜாங் சொன்னார்.
அதன் மக்கள்தொகைக்கு போதுமான தடுப்பூசி உள்ளது. எனினும் அரை பில்லியனுக்கும் அதிகமான அளவை வெளிநாடுகளுக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது. இது உள்நாட்டில் வழங்கப்பட்ட எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம் என்று அந்நாட்டு வல்லுநர்கள் கூறினர்.
தடுப்பூசி போடுவதில் மிக வேகமாக இயங்கும் நாடாக இஸ்ரேல் உள்ளது. இங்கு 100 பேருக்கு 94 அளவு என்ற விகிதத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 156,207,49 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அங்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஜனவரி 16ஆம் தேதி முதல் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
உள்நாட்டுத் தேவைக்கும் வெளிநாடுகளுக்கும் தடுப்பூசி மருந்தை மில்லியன் கணக்கான அளவில் மிக வேகமாகத் தயாரித்து வரும் இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது.
உலக அளவிலான உற்பத்தியாளராகவும், கொவிட்-19 தடுப்பூசியின் கண்டுபிடிப்பாளராகவும் இந்தியா தனது திறனைக் காட்டியுள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அறிவியலாளரான சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.

