மூன்று வகை பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை மேலும் கடுமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுப்பது உறுதி என்பதை உணர்த்த தண்டனை கடுமையாக்கப்படுகிறது.
பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளை மறுஆய்வு செய்த பிறகு மாற்றங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அண்மைய ஆண்டுகளில் பாலியல் வழக்குகள் தொடர்பான தீர்ப்புகள் குறித்து பொதுமக்களிடமிருந்து அதிருப்திக் குரல்கள் எழுந்ததைத் தொடர்ந்து மறுஆய்வு நடத்தப்பட்டதாக அமைச்சர் சண்முகம் கூறினார்.
குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை போதுமானதா என்ற கேள்வி எழுந்ததை அவர் சுட்டினார்.
அதுமட்டுமல்லாமல், பாலியல் குற்றம் புரிந்தவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்ததால் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படவில்லை என்ற பேச்சும் எழுந்தது.
மூன்று வழக்குகளை அமைச்சர் சண்முகம் உதாரணங்களாகக் காட்டினார்.
எம்ஆர்டி ரயிலில் மானபங்கம் குற்றம் புரிந்த பல்கலைக்கழக மாணவன், தமது முன்னாள் காதலியின் கழுத்தை நெரித்து, அவரது இடது கண்ணில் தமது கட்டை விரலை அழுத்திய 22 வயது பல்கலைக்கழக மாணவன், பெண் ஒருவர் கழிவறையைப் பயன்படுத்திக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் கைபேசியைப் பயன்படுத்தி காணொளி எடுத்த 23 வயது பல்கலைக்கழக மாணவன் ஆகியோர் தொடர்பான வழக்குகளை அமைச்சர் சண்முகம் உதாரணங்களாகக் காட்டினார்.
மாபங்க குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனையை இரண்டு ஆண்டுகளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக திரு சண்முகம் கூறினார்.
2016ஆம் ஆண்டிலிருந்து 2020ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டிலும் சராசரியாக 1,190 மானபங்க வழக்குகள் பதிவானதாக அவர் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டிலிருந்து 2015ஆம் ஆண்டு வரை பதிவான மானபங்க வழக்குகளைவிட இது 24 விழுக்காடு அதிகம்.
வயது குறைந்தோருடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வது தொடர்பான இரண்டு குற்றங்களுக்கான அதிபட்ச தண்டனை ஓர் ஆண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்தப்பட இருக்கிறது.
முதல் குற்றம் 14 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவருக்கு முன்னிலையில் பாலியல் செயலில் ஈடுபடுவது அல்லது பாலியல் தொடர்பான படங்களைக் காட்டுவது.
இரண்டாவது குற்றம் அதே மாதிரியான குற்றங்களை 16 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களுக்கு எதிராகச் செய்வது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.