ஓராண்டு சோதனைமுறைத் திட்டமாக பொங்கோல் வட்டாரத்தில் உள்ள ஏறத்தாழ 700 வீடுகளுக்கு மளிகைப் பொருட்களையும் பொட்டலங்களையும் இயந்திர மனிதர்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆள்பலம் பற்றாக்குறையை சமாளிக்க இந்தச் சோதனைமுறைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சோதனைமுறைத் திட்டத்தின்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் ஏழு வாட்டர்வே வூட்கிரேஸ் புளோக்குகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு இரண்டு இயந்திர மனிதர்கள் இலவசமாகப் பொட்டலங்களையும் மளிகைப் பொருட்களையும் விநியோகம் செய்யும்.
விநியோகம் செய்யப்படும் நேரத்தையும் குடியிருப்பாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.
இந்தச் சோதனைமுறைத் திட்டத்துக்குத் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் தலைமை தாங்குகிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், நிலப் போக்குவரத்து ஆணையம், நகர மறுசீரமைப்பு ஆணையம், சிஎம் லாஜிஸ்டிக்ஸ் , ஃபேர்பிரைஸ், ஒட்சோ ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் சோதனைமுறைத் திட்டத்தை அது நடத்துகிறது.
இந்தச் சோதனைமுறைத் திட்டம் இன்று தொடங்கியது.
அறிமுக விழாவில் தொடர்பு, தகவல் துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி கலந்துகொண்டார்.