சிங்கப்பூர் தனது எல்லைகளைத் திறந்து, விமானப் போக்குவரத்துக்குப் புத்துயிரூட்டுவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து வருகிறது.
அந்த வகையில், கொவிட்-19 தொற்று குறைவாக, மிதமாக உள்ள நாடுகளைச் சேர்ந்த, தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகளுக்காக இருதரப்புப் பயண வழித்தடங்கள் இவ்வாண்டின் பிற்பகுதியில் ஏற்படுத்தப்படலாம் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இல்லத் தனிமை உத்தரவுகளும் தனிமைப்படுத்தல் தொடர்பிலான மற்ற நடவடிக்கைகளும் பயணத்தைத் தடுத்துவிடும் என்று அமைச்சர் ஓங் கூறினார். ஆகையால், அத்தகைய தேவைகளில் இருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை சிங்கப்பூர் கண்டறிய வேண்டியிருப்பதாக அவர் சொன்னார்.
“சிங்கப்பூருக்கு வந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள எவரும் விரும்பமாட்டார்கள்,” என்று ‘மணி எஃப்எம் 89.3’ வானொலிக்கு இன்று (மார்ச் 12) அளித்த நேர்காணலின்போது அமைச்சர் ஓங் கூறினார்.
தடுப்பூசியால் நிலைமை மாறி வரும் வேளையில், பரிசோதனை, நடமாட்டக் கட்டுப்பாடுகள், பாதுகாப்பான, கொரோனா தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய நாடுகளை அடையாளம் காணுதல் போன்ற மற்ற நடவடிக்கைகளையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர்.
எடுத்துக்காட்டாக, கிருமித்தொற்று விகிதம் மிதமாக உள்ள, அதே நேரத்தில் தடுப்பூசித் திட்டங்கள் நடப்பில் உள்ள நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு சிங்கப்பூருக்குள் நுழைவு அனுமதி அளிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
“தடுப்பூசியுடன் பரிசோதனை நடவடிக்கையும் இடம்பெறும்போது, பாதுகாப்பான பயண வழித்தடங்களைத் திறக்க சாத்தியமுள்ளது,” என்றார் திரு ஓங்.