கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானதாக, தடுப்பாற்றல்மிக்கதாக இருந்தால், அது எங்கு தயாரானது என்பதைப் பொருட்படுத்தாமல் சிங்கப்பூர் அதனைப் பயன்படுத்தும் என்று ‘பிபிசி’ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியின்போது பிரதமர் லீ சியன் லூங் (படம்) தெரிவித்தார்.
“தடுப்பூசிகள் தேசியத்தைக் கொண்டிருப்பதில்லை. அவை எந்த நாட்டிலிருந்து வந்தாலும் பயன்படுத்துவோம். அவை பாதுகாப்பானது, தடுப்பாற்றல்மிக்கது எனில் அவற்றைப் பயன்படுத்துவோம்,” என்று பிரதமர் லீ கூறினார்.
பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளைப் பெற சிங்கப்பூர் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இதுவரை ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா நிறுவனங்களின் தடுப்பூசிகள் சிங்கப்பூருக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சீனாவின் சினொவேக் தடுப்பூசியின் முதல் தொகுதி கடந்த மாதம் சிங்கப்பூரை வந்தடைந்தபோதும் அதை இங்கு பயன்படுத்த சுகாதார அறிவியல் ஆணையம் இன்னும் அனுமதி அளிக்கவில்லை.
சீனத் தயாரிப்பு தடுப்பூசியைப் பயன்படுத்தும்படி நெருக்கடி தரப்படுகிறதா எனக் கேட்டதற்கு, “சினொவேக் தடுப்பூசியை மதிப்பீடு செய்து வருகிறோம். பாதுகாப்பு, செயல்திறன் அம்சங்களில் அது தேறிவிட்டால் அதனைப் பயன்படுத்துவோம்,” என்று திரு லீ பதிலளித்தார்.
கடந்த டிசம்பரில் தடுப்பூசி நடவடிக்கை தொடங்கிய நிலையில், இதுவரை 610,000 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
முன்னதாகவே கிடைத்துவிட்டபோதும் தடுப்பூசி நடவடிக்கை ஏன் இன்னும் வேகமெடுக்காதது பற்றி கேட்டதற்கு, “உள்ளூரில் தொற்று பாதிப்பு அதிகமாக இல்லை. அத்துடன், தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு உறுதியளித்து, அவர்களின் கவலைகளையும் பதற்றத்தையும் போக்குவதற்கு நேரம் இருந்தது. அதை முறையாகச் செய்ய விரும்பினோம். அதனால், எங்களுக்குப் பெரும் நெருக்கடி இல்லை,” என்று பிரதமர் விளக்கமளித்தார்.
“நாடுகள் தடுப்பூசி நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதால், குறிப்பிட்ட விகிதத்தினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் பட்சத்தில், இவ்வாண்டின் பிற்பகுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் அனைத்துலகப் பயணங்களுக்காக எல்லைகள் திறந்துவிடப்படலாம்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தா