மியன்மாரின் யங்கூன் நகரில் மேலும் பல இடங்களில் முழு ராணுவ சட்டம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்புப் படையினரின் கடுமையான ஒடுக்குமுறைக்கு சென்ற வார முடிவில் குறைந்தபட்சம் 50 பேர் மாண்டுவிட்டனர்.
அதைத் தொடர்ந்து ராணுவ நிர்வாகம், ராணுவ சட்டத்தை யங்கூன் நகரில் நீட்டித்துள்ளது.
இதனிடையே, நேற்றும் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆறு பேர் மாண்டுவிட்டனர் என்று ஊடகத் தகவல்கள் கூறின.
அந்த நகரில் இருக்கும் தொழில் பேட்டைகளில் ஞாயிற்றுக்கிழமை தீ மூட்டப்பட்டதால் பல சீன நிறுவனங்கள் உப்பட ஏராளமான தொழிற்சாலைகள் அழிந்ததாகக் கூறப்படுகிறது. சீன நிதி ஆதரவு பெற்ற 32 தொழிற்சாலைகள் ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டதாகவும் S$50 மில்லியன் சேதம் ஏற்பட்டதாகவும் குளோபல் டைம்ஸ் என்ற சஞ்சிகை தெரிவித்தது.
இதையடுத்து பாதுகாப்புத் தேவை என்று மியன்மார் அதிகாரிகளை சீனத் தூதரகம் கேட்டுக்கொண்டதாகவும் அதன் பிறகு முழு ராணுவச் சட்டம் யங்கூனில் மேலும் பல இடங்களுக்கு நீட்டிக்கப்பட்டதாகவும் ராணுவ நிர்வாகம் கூறியது. மியன்மாரில் ஜனநாயக ஆதரவு இயக்கத் தலைவி சூச்சி அம்மையார் சிறை வைக்கப்பட்டு உள்ளதை எதிர்த்து ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்றும் பல நகர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மான்டலே, ஆங்லான், மியூங்யான் ஆகிய நகர்களில் போலிசார் துப்பாக்கியால் சுட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்களும் ஊடகத் தகவல்களும் தெரிவித்தன. ஒரு சிறுமிக்கு கையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது.
சிறுவன் ஒருவன் முகத்தில் சுடப்பட்டான் என்று மியூங்யான் நகரில் பதுங்கிக்கொண்டுள்ள 18 வயது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறியதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

