புதிதாக அமைக்கப்பட்டுள்ள நான்கு கொவிட்-19 தடுப்பூசி மையங்களில் மொடர்னா நிறுவனத்தின் தடுப்பூசி இன்று முதல் போடப்படும்.
ஹொங் கா நார்த் சமூக மன்றம், மார்சிலிங் சமூக மன்றம், பொங்கோல் 21 சமூக மன்றம், ராடின் மாஸ் சமூக மன்றம் ஆகியவையே அந்நான்கு மையங்கள்.
மற்ற அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் குறிப்பிட்ட பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி தொடர்ந்து போடப்படும்.
மொடர்னா தடுப்பூசி மேலும் வந்து சேர்ந்தபின் அதிகமான மையங்களில் அந்தத் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது.
"ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் ஒருவகை தடுப்பூசி மட்டுமே போடப்படும். தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும்போது, இருமுறை தடுப்பூசி போடவும் ஒரே மையத்தைத் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்," என்று அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எத்தனை பேருக்குத் தடுப்பூசி போட இயலும் என்பதில் ஒவ்வொரு மையமும் வெவ்வேறு கொள்திறனைக் கொண்டுள்ளதால், முதல்முறை தடுப்பூசி போடுவதற்கான காத்திருப்பு நேரமும் மாறுபடும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நன்யாங் சமூக மன்றம், செங்காங் சமூக மன்றம், அரீனா @ அவர் தெம்பனிஸ் ஹப் ஆகிய மூவிடங்களிலும் இன்று முதல் புதிய தடுப்பூசி மையங்கள் செயல்படத் தொடங்கும்.
ஏப்ரல் மாத நடுப்பகுதியில், நாடு முழுவதும் மொத்தம் 40 தடுப்பூசி மையங்கள் இருக்கும்.
புதிய ஏழு நிலையங்களுடன் சேர்த்து, தகுதியுள்ளவர்கள் இப்போது 31 தடுப்பூசி நிலையங்களிலும் 20 பலதுறை மருந்தகங்களிலும் 22 பொதுச் சுகாதார ஆயத்தநிலை மருந்தகங்களிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ள இயலும்.
ஆயினும், பலதுறை மருந்தகங்களைக் காட்டிலும் அதிகமானோரைக் கையாள முடியும் திறனைக் கொண்டுள்ளதால் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்யுமாறு மக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
நேற்று முன்தின நிலவரப்படி, 792,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் 243,000 பேர் இருமுறையும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
மூத்த குடிமக்களுக்கான தடுப்பூசி நடவடிக்கை பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், இதுவரை 175,000க்கும் மேற்பட்டோர் தங்களது முதல் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர். ஏறக்குறைய 230,000 பேர் முதல் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர்.
தடுப்பூசி நடவடிக்கையை முடுக்கிவிடும் வகையில் அதிகமான தடுப்பூசி மையங்களை அமைக்கும் பணியைச் சுகாதார அமைச்சு விரைவுபடுத்தியுள்ளது.

