ரயில்தட விரிவாக்கத்தில் அமைக்கப்பட்ட மின்வடக்கம்பியின் காப்பு நாடாவில் ஏற்பட்ட வெடிப்பும் மின்சாதனம் ஒன்றின் துருப்பிடித்த பாகமுமே கடந்த ஆண்டில் பெரிய அளவில் நிகழ்ந்த ரயில் பயணத் தடைக்கான காரணங்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி துவாஸ் வெஸ்ட் எக்ஸ்டென்ஷன் ரயில் தடத்தில் ஏற்பட்ட கோளாற்றைக் கண்டறிய அமைக்கப்பட்ட குழு தடயவியல் விசாரணையை கடந்த சில மாதங்களாக நடத்தி வந்தது. விசாரணை முடிவின் விவரங்களை போக்கு வரத்து அமைச்சர் ஓங் யி காங் விளக்கியுள்ளார்.
குறிப்பிட்ட அந்த ரயில் தடத்தில் நிகழ்ந்த கோளாறு காரணமாக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு, வட்டப் பாதை ஆகிய மூன்று ரயில் தடங்களில் பயணத் தடை ஏற்பட்டது.
உட்லண்ட்ஸுக்கும் ஜூரோங் ஈஸ்ட்டுக்கும் இடைப்பட்ட ரயில் நிலையங்கள், குவீன்ஸ்டவுனுக்கும் கல் சர்கிளுக்கும் இடைப்பட்ட ரயில் நிலையங்கள், சிராங்கூனுக்கும் ஹார்பர்ஃபிரண்டுக்கும் இடைப்பட்ட ரயில் நிலையங்கள் ஆகியன அன்றைய தினம் பாதிக்கப்பட்டன.
அதன் காரணமாக 15 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதோடு சுமார் 123,000 பயணிகள் அவதியுற்றனர்.
ஆங்காங்கே நின்றுவிட்ட ரயில்களில் இருந்து இறங்கிய பயணிகள் அடுத்தடுத்த நிலையங்களை அடைய ரயில் தண்டவாளங்களின் வழியே நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேநேரம் பேருந்து வழியாக தங்களது பயணத்தைத் தொடர பலரும் அவசரமாக முயன்றதன் காரணமாக பேருந்து நிறுத்தங்களில் பெருங்கூட்டம் காணப்பட்டது.
அந்தப் பயண இடையூறுக்குக் காரணமான கோளாறுகளைச் சரிசெய்ய ஏராளமான செலவும் செயல்பாடுகளும் தேவைப்பட்டதாக திரு ஓங் சொன்னார்.
சம்பவத்திற்குப் பின்னர், துவாஸ் வெஸ்ட் எக்ஸ்டென்ஷன் தடத்தில் 22 கிலோ வாட் மின்வடக் கம்பிகளை மாற்றும் பணியில் ஆல்ஸ்டம் என்னும் நிறுவனம் கடந்த டிசம்பர் முதல் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் ஓங் கூறினார்.
இந்தப் பணியை விரைவாக முடிக்கும் நோக்கில் அந்த ரயில் தடம் வழியாக அமைந்துள்ள குறிப்பிட்ட சில நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டு வருகின்றன. இம்மாதம் 14ஆம் தேதி தொடங்கி மே 23ஆம் தேதி வரை இதே நிலை தொடரும். பாதிக்கப்படும் பயணிகளுக்காக இணைப்புப் பேருந்துச் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
ஐடிடிசி எனப்படும் புதிய ஒருங்கிணைந்த ரயில் சோதனை நிலையத்திற்கான நில அகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசினார்.
ரயில் தடங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் கடந்த பத்தாண்டில் இரட்டிப்பாகி உள்ளதாக அப்போது அவர் குறிப்பிட்டார். அதேநேரம் மிதமிஞ்சிய பராமரிப்புக்கான அவசியம் தேவைப்படவில்லை என்று கூறிய திரு ஓங் அதற்கான விளக்கத்தைச் சொன்னார்.
"அதிக பணத்தையும் நிறைய அம்சங்களையும் ஈடுபடுத்தி அதற்கு ஈடான பலன்களைப் பெறமுடியாமல் போவதுதான் அத்தகைய மிதமிஞ்சிய பராமரிப்பு. அது வெறும் கணக்காக மட்டுமே தோன்றும். அவ்வாறு செய்வது புத்திசாலித்தனமானது அல்ல.
"சின்னஞ்சிறிய தவறுகள் பெரிய இடையூறுகளை உருவாக்கும் என்பதை நாம் புரிந்துகொண்டு செய்லபட வேண்டும்.
"எனவே எங்கு தேவையோ அங்கு செலவிடுவோம். அதாவது, பாதுகாப்பையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்
படுத்தும் நடவடிக்கைகளின் மீது கவனம் செலுத்துவோம்.
"நமது ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்போம். பிரச்சினைகளைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான திறன்களை வளர்த்துக்கொள்ள அவர்களுக்கு உதவுவோம். இவற்றின் மூலம் பராமரிப்புப் பணிகளை துடிப்பான முைறயில் மேம்
படுத்தலாம்," என்று திரு ஓங் விவரித்தார்.
மூன்று ரயில் தடங்களில் 123,000 பயணிகளை பாதித்த பயணத் தடை

