மலேசியாவைச் சேர்ந்த குறிப்பிட்ட சரக்கு வாகன ஓட்டுநர்களுக்கு கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கையை சிங்கப்பூர் இன்று (மார்ச் 20) தொடங்கியது.
அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்கள் மூலம் கிருமித்தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜூ கூன் வட்டாரத்தில் எண் 13 பீனாய் செக்டரில் ஒரு கூடம் இதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது. உட்லண்ட்சில் மேலும் ஒரு கூடம் அமைக்கப்பட்டு இருக்கிறது என்று வாகன ஓட்டுநர்கள் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டது.
இதனிடையே, இன்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மலேசிய வாகன ஓட்டியான டோ ஆ பெங் என்பவர், தனக்கு ஃபைசர்-பயோஎன்டெக் ஊசி போடப்பட்டதாகவும் இன்னும் மூன்று வார காலத்தில் இரண்டாவது ஊசியைப் போட்டுக்கொள்ள தான் திரும்பி வரப்போவதாகவும் கூறினார்.
மலேசியாவைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர்கள் சிங்கப்பூரில் இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு சான்றிதழ் ஒன்றைப் பெறுவார்கள். இரண்டாவது ஊசி போட்டுக்கொண்ட பிறகு 14 நாட்கள் கழித்து அன்றாட பரிசோதனையில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று வர்த்தக தொழில் அமைச்சு ஏற்கெனவே தெரிவித்து இருந்தது.
ஓட்டுநர்களுடன் வரும் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். இருந்தாலும் அவர்கள் அப்போதைக்கு அப்போது பரிசோதனைக்கு உட்பட வேண்டும்.