இந்தியாவில் மீண்டும் வேகம் எடுத்திருக்கும் கிருமிப் பரவல் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகின்றன. புதிதாக 40,953 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்றுக் காலை அறிவிக்கப்பட்டது. கடந்த 4 மாதங் களில் ஆக அதிகமாகப் பதிவான ஒருநாள் தொற்று இது. 2020 நவம்பர் 29ல் 41,810 என பதிவான எண்ணிக்கையை புதிய சம்பவங்கள் நெருங்கி வருகின்றன.
குறிப்பாக, கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு நாளும் 20,000க்கும் மேல் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இதன் காரணமாக புதிய நோயாளி களுக்கும் நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோருக்கும் இடையிலான விகிதம் அதிகரித்து வருகிறது. புதிதாக 40,953 பேர் பாதிக்கப்பட்ட அதே நாளில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,653 என பதிவானது.
புதிய எண்ணிக்கையில் பெரும் பகுதி, அதாவது 25,681 சம்பவங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில் பதிவாகி உள்ளன.
இம்மாநிலத் தலைநகரான மும்பை ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரே நாளில் 3,062 தொற்றுச் சம்பவங்கள் பதிவானது அங்கு அதிர்ச்சியை ஏற்
படுத்தி உள்ளது. அந்நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி பதிவானதைக் காட்டிலும் இப்போது கூடுதல் தொற்று உருவாகி உள்ளது. அன்றைய தினம் ஆக அதிகமாக 2,848 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
பரவல் வேகத்தைக் கட்டுப்
படுத்த ஏற்கெனவே ஏராளமான கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் 305 கட்டடங்கள் மூடப்பட்டன. இந்நிலையில், மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா, எல்லா மாநிலங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். மக்களின் அலட்சியமே நிலைமையை மீண்டும் மோசமாக்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற அம்சங்களில் கடுமை காட்டுமாறு கூறியுள்ளார்.

