சிங்கப்பூருக்கு மிக அருகில் இருக்கும் இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் உள்ளிட்ட ரியாவ் தீவுகள் அடங்கிய வட்டாரம், பக்கத்து நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்குத் தன் கதவை திறந்துவிட ஏறக்குறைய ஆயத்தமாகிவிட்டன என்று இந்தோனீசியாவின் சுற்றுலா, புத்தாக்கப் பொருளியல் அமைச்சர் சாண்டியாகோ உனோ கூறி இருக்கிறார்.
கொவிட்-19 கிருமித்தொற்று குறைந்து வருவதும் நிலைப்பட்டு இருப்பதுமே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.
பாத்தாம் தீவில் உள்ள நாங்சா என்ற சுற்றுலாத்தலம் பிந்தானில் உள்ள லாகோய் என்ற சுற்றுலா இடம் ஆகியவற்றை ஏப்ரல் 21 முதல் பயணிகளுக்குத் திறந்துவிட்டு, இந்தப் பயணத் திட்டத்தைத் தொடங்கலாம் என்றார் அவர்.
பாத்தாம் அதிகாரிகளுடன் அமைச்சர் சனிக்கிழமை பேச்சு நடத்தினார். அதையடுத்து கருத்து கூறிய இந்தோனீசிய அமைச்சர், பாத்தாம், பிந்தான் ஏறக்குறைய தயாராகிவிட்டன என்றார்.
ரியாவ் தீவுகள் திறக்கப்படுவதால் சிங்கப்பூருடன் பாதுகாப்பான பயண ஏற்பாட்டை இந்தோனீசியா செய்துகொள்வது சாத்தியமாக இருக்குமென்றார் திரு உனோ.
இந்தோனீசிய தீபகற்பத்தின் அனைத்துலக எல்லைப் பகுதிகள் கொவிட்-19 நிலவரத்திற்கேற்ப படிப்படியாக திறக்கப்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிபர் விடோடோவின் உத்தரவுக்கு இணங்க இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அவர் கூறினார். இந்தோனீசியாவின் முக்கிய சுற்றுலா இடமாகத் திகழும் பாலி தீவு, ஜூன் அல்லது ஜூலையில் மட்டுமே மீண்டும் திறக்கப்படும் என்று தெரிகிறது.
ரியாவ் தீவுகளில் கொவிட்-19 தொற்று நிலைப்பட்டுவிட்டது. அங்கு உள்ள பிரபல சுற்றுலா இடங்களில் புதிய தொற்று இல்லை என்பதை திரு உனோ சுட்டினார். கிருமித்தொற்றைத் தொடர்ந்து கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதே நம்பிக்கை என்றாரவர்.
ரியாவ் வழியாக இந்தோனீசியா வுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் தங்களுக்கு கிருமித்தொற்று இல்லை என்பதை சான்றிதழ் மூலம் நிரூபிக்க வேண்டும். தரையிறங்கும்போது அவர்களுக்கு சுவாசப் பரிசோதனை நடத்தப்படும்.
சுற்றுப் பயணிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க தகவல் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூருடன் பாதுகாப்பான பயண வட்டாரத்தைத் திறந்துவிட ஆயத்தமாக பாத்தாம், பிந்தானில் தடுப்பூசி இயக்கத்தை இந்தோனீசியா அரசாங்கம் தீவிரப்படுத்தி உள்ளது.

