இணைந்து செயல்பட சிங்கப்பூர்-மலேசியா இணக்கம்
எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையே பயணம் செய்ய ஏதுவாக கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ்களுக்கு இருதரப்பும் அங்கீகாரம் அளிப்பது தொடர்பில் சிங்கப்பூரும் மலேசியாவும் இணைந்து செயல்பட உடன்பட்டுள்ளன.
வரும் மாதங்களில் கருணை அடிப்படையிலான எல்லை தாண்டிய பயணங்களை அனுமதிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டு உள்ளன.
இருநாள் பயணமாக மலேசியா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், புத்ராஜெயாவில் நேற்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷிஷாமுதீன் ஹுசேனைச் சந்தித்துப் பேசினார்.
இப்போதுள்ள இரு சிறப்புப் பயண ஏற்பாடுகளுடன் மற்ற வகைப் பயணிகளும் பயணம் செய்ய ஏதுவாக எல்லை தாண்டிய பயணத்தைப் படிப்படியாக அனுமதிக்கவும் இருநாட்டு அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்தனர்.
இரு நாடுகளிலும் கொவிட்-19 நிலைமை கண்காணிக்கப்பட்டு, இரு நாட்டு மக்களின் பொதுச் சுகாதாரமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும்.
தத்தம் நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டங்கள் குறித்து அமைச்சர்கள் இருவரும் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூடிய விரைவில் எல்லை தாண்டிய பயணத்திற்கு அவை எவ்வாறு வகை செய்யும் என்பது குறித்து ஆலோசித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள மலேசியர்கள், மலேசியாவில் இருக்கும் சிங்கப்பூரர்கள் உட்பட இரு நாடுகளிலும் உள்ள நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்குத் தடுப்பூசி அளிக்கும் வகையில் தேசிய அளவிலான தங்களது தடுப்பூசித் திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல உறுதிபூண்டு இருப்பதாக ஒரு கூட்டறிக்கை மூலம் இரு நாடுகளும் தெரிவித்துள்ளன. தடுப்பூசிச் சான்றிதழுக்கான இருதரப்பு அங்கீகாரம் தொடர்பான செயல்பாட்டு விவரங்களை இருநாடுகளும் பேசி, முடிவு செய்யும்.
"இருநாட்டுப் பிரதமர்களும் சந்திக்கும்போது இதன் தொடர்பில் சில அறிவிப்புகளை வெளியிடுவோம் என நம்புகிறேன்," என்று டாக்டர் விவியன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இருநாட்டுத் தலைவர்களின் 10வது சந்திப்பு குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்தனர். அச்சந்திப்பு இவ்வாண்டு சிங்கப்பூரில் நடைபெறும். நேரடி இருதரப்பு ஈடுபாடுகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் பணியாற்றவும் அமைச்சர்கள் இருவரும் இணக்கம் தெரிவித்தனர்
இருதரப்பு ஒத்துழைப்பை மறுஆய்வு செய்த அமைச்சர்கள், கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கங்களில் இருந்து மீள்வதை முடுக்கிவிடும் வகையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் ஆர்வமாக இருப்பதாகக் கூறினர்.
சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையிலான மிகச் சிறப்பான, நீண்டகால உறவுகளை மறு உறுதிப்படுத்திய அமைச்சர்கள், இருதரப்பிற்கும் நலம் பயக்கும் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தையும் சுட்டினர்.
ஓராண்டிற்கும் அதிக காலத்திற்குப் பின் மலேசியா சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நேரடிச் சந்திப்பிற்கு மாற்றாக ஏதுமில்லை என்றும் டாக்டர் விவியன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடிநிலை குறித்தும் அந்நாட்டு மக்கள் மீதும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் இருநாட்டு அமைச்சர்களும் கவலை தெரிவித்தனர்.
தமது பயணத்தின்போது மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின், மூத்த அமைச்சரும் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சருமான அஸ்மின் அலி, மூத்த அமைச்சரும் தற்காப்பு அமைச்சருமான சப்ரி யாக்கோப், அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் ஆகியோரையும் டாக்டர் விவியன் சந்திக்கவிருக்கிறார்.

