பணியின்போது முஸ்லிம் தாதியர் தலையங்கி (துடோங்) அணிய அனுமதிப்பதை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக முஸ்லிம் தலைவர்களிடம் ஆறு மாதங்களுக்குமுன் தெரிவிக்கப்பட்டது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்துள்ளார்.
தாதியர் தலையங்கி அணிய விரும்பினால், அவர்கள் அவ்வாறு செய்ய அனுமதிப்பதற்கான காரணங்களை அரசாங்கத்தால் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும் சமூகத்துடனும் மற்ற குழுக்களுடனும் ஆலோசித்தபின் அரசாங்கம் தனது முடிவை அறிவிக்கும் என்றும் அமைச்சர் சண்முகம் கூறினார்.
கேலாங் சாலையில் அமைந்துள்ள கதிஜா பள்ளிவாசலில் நேற்று மூத்த முஸ்லிம் தலைவர்களுடனான கலந்துரையாடலின்போது திரு சண்முகம் இவ்வாறு பேசினார்.
சிங்கப்பூர் இஸ்லாமியக் கல்விமான்கள், சமயப் போதகர்கள் சங்கத்தின் (பெர்காஸ்) தலைவர் உஸ்தாஸ் ஹஸ்பி ஹசான், மூத்தோருக்கான 'பெர்காஸ்' மன்ற உறுப்பினர்கள் உஸ்தாஸ் அலி முகம்மது, உஸ்தாஸ் பசுனி மௌலான் ஆகியோர் இந்தச் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அவர்களும் ஆறு மாதங்களுக்கு அமைச்சர் கூறிய கருத்துகளை உறுதிப்படுத்தினர்.
சமூகத்துடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அவை நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் முஸ்லிம் தலைவர்களிடம் திரு சண்முகம் சொன்னார். பிரதமர் லீ சியன் லூங்கும் சமூகத் தலைவர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கதிஜா பள்ளிவாசலில் முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது, தாம் கூறியதைப் பற்றி அமைச்சர் சண்முகம் பகிர்ந்துகொண்டார்.
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, பிரதமர் அலுவலக அமைச்சர் டாக்டர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான் ஆகியோர் இம்மாதம் 8ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறிய கருத்துகளுடன் அரசாங்கம் ஒத்த நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
இது உணர்வுபூர்வமான விவகாரம் என்பதிலும் தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதிலும் இணக்கம் நிலவுவதாக டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் அப்போது தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இவ்விவகாரம் தொடர்பில் மலாய்/முஸ்லிம் சமூகத்தினரின் கருத்துகளை மலாய்/முஸ்லிம் எம்.பி.க்கள் அமைச்சரவையிடம் தெரிவித்து இருப்பதாகவும் அவர்கள் பல்வேறு குழுக்களுடன் பேசியதாகவும் அமைச்சர் மசகோஸ் நேற்று ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
"அந்தக் கலந்துரையாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையில் நடந்தன. பலதரப்பட்ட கருத்துகள் குறித்து வெளிப்படையாக விவாதித்தோம், பல்வேறு சமயத்தினர் வாழும் நம் நாட்டில் பொதுவான சமய வெளிகளைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதைப் பலரும் புரிந்துகொண்டனர்," என்றார் அமைச்சர் மசகோஸ்.

