கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் 45 முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கு விரிவுபடுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். தடுப்பூசி போட்டுக்கொள்ள விரும்புவோர் vaccine.gov.sg எனும் இணையத்தளம் வாயிலாக தங்களது பெயரைப் பதிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் மின்னிலக்கத் தொழில்நுட்பப் பயன்பாடு குறித்து நன்கு அறிந்திருப்பர் என்பதால் அவர்களுக்குக் கடிதம் அனுப்பப்படாது என்று சுகாதார அமைச்சு தெரிவித்து இருக்கிறது. கொவிட்-19 தொற்றுக்கு எதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு கான், முன்னுரிமைக் குழுக்களுக்கு தடுப்பூசி நடவடிக்கை சிறப்பாகப் போய்க்கொண்டிருப்பதாகக் கூறினார். அதனால், நேற்று முதல் இளம் வயதுப் பிரிவினருக்கும் அத்திட்டத்தை விரிவுபடுத்துவதாக அவர் குறிப்பிட்டார். "எங்களது தடுப்பூசி நடவடிக்கைகளைச் சீராக விரிவுபடுத்தி வருவதால் அனைவரும் பொறுமை காத்து, ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்," என்றார் அமைச்சர் கான். அத்துடன், தொடக்க கட்டங்களில் ஏதேனும் வசதிக்குறைவு ஏற்பட்டிருந்தால் அதற்காக நம் குடியிருப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்ள விரும்புவதாகவும் அவர் சொன்னார். சராசரியாக கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 40,000 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டதாக திரு கான் குறிப்பிட்டார். அவர்களில் இரண்டாம் முறை தடுப்பூசி போட்டுக்கொண்டோரும் அடங்குவர். திட்டமிட்டபடி தடுப்பூசிகள் வந்து சேரும் பட்சத்தில், இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டிற்குள் அனைத்துச் சிங்கப்பூரர்களுக்கும் நீண்டகாலக் குடியிருப்பாளர்களுக்கும் போதுமான அளவில் தடுப்பூசிகளைக் கொண்டிருப்போம் என்று அமைச்சர் கான் கூறினார். அவ்வாறு நடந்தால், சிங்கப்பூரால் இவ்வாண்டு இறுதிக்குள் கொவிட்-19 தடுப்பூசி நடவடிக்கையை முடித்துவிட இயலும். இணையத்தளம் வழியாகப் பதிவுசெய்தபின், 45 முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அந்தக் குறுஞ்செய்தியில் காணப்படும் தனிப்பட்ட இணைய முகவரியைச் சொடுக்கி, தடுப்பூசிக்கான நாள், நேரத்தை அவர்கள் தெரிவுசெய்யலாம். தங்களது பெயரைப் பதிவுசெய்த சில நாள்களுக்குள் அவர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பப்படும். என்றாலும், தடுப்பூசி விநியோகம் தாமதமாகும் பட்சத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்பட அதிக காலம் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று திரு கான் சொன்னார். குறுஞ்செய்தி வந்த 14 நாள்களுக்குள் தடுப்பூசிக்கான நாள், நேரத்தைத் தெரிவுசெய்ய வேண்டும். சிங்கப்பூரில் நேற்று முன்தினம் வரை 1,109,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அவர்களில் கிட்டத்தட்ட 310,000 பேர் இருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள். மூத்த குடிமக்களைப் பொறுத்தமட்டில், 55 விழுக்காட்டினருக்கும் மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டனர் அல்லது தடுப்பூசி போடுவதற்கான நேரத்தைத் தெரிவுசெய்து உள்ளனர் என்று அமைச்சு தெரிவித்தது. இப்போதைக்கு 31 தடுப்பூசி மையங்கள் செயல்பட்டு வருவதாக அமைச்சர் கான் குறிப்பிட்டார். அத்துடன், 20 பலதுறை மருந்தகங்களிலும் 22 பொதுச் சுகாதார ஆயத்தநிலை தனியார் மருந்தகங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. வரும் ஏப்ரல் மாத நடுப்பகுதிவாக்கில் மொத்தம் 40 தடுப்பூசி மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் அமைச்சர் சொன்னார்.
45 முதல் 59 வயதுக்கு உட்பட்டோருக்கு கொவிட்-19 தடுப்பூசி
2 mins read
கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் 45 முதல் 59 வயதுக்குட்பட்டோருக்கு விரிவுபடுத்தப்படுவதாக சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் அறிவித்துள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
குறிப்புச் சொற்கள்

