வேலையிடங்களில் நேர்ந்த விபத்துகளால் சென்ற ஆண்டு மட்டும் 46 ஊழியர்கள் தங்களின் கைகள், விரல்களை இழந்துள்ளனர்.
பெரும்பாலும் இயந்திரங்களை இயக்குவதில் போதிய பாதுகாப்பைக் கடைப்பிடிக்காததால் ஊழியர்களுக்கு இந்நிலை நேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
ஊழியர்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம் ஆகியவற்றில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய விபத்துகள், தடுக்கப்படக் கூடியவையே என்று வலியுறுத்தினார் மனிதவள மூத்த முணை அமைச்சர் ஸாக்கி முகம்மது.
வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார மன்றத்தின் 'சேஃப் ஹேண்ட்ஸ்' இயக்கத்தை நேற்று அவர் தொடங்கி வைத்தபோது இதனைத் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, முயற்சிகளை முடுக்கிவிடவேண்டும் என்றார் அவர்.
விபத்து நேரவிருந்த தருணங்களைப் பற்றி புகார் செய்யும் கலாசாரத்தை நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.
இயந்திரங்களைப் பாதுகாப்பாக இயக்குவது, கை மற்றும் விரல் காயங்களைத் தவிர்ப்பதற்கான வழிகள் ஆகியவற்றின் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே 'சேஃப் ஹேண்ட்ஸ்' இயக்கம்.
இயந்திரப் பயன்பாட்டின்போது சென்ற ஆண்டு 1,756 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அமைச்சர் ஸாக்கி தெரிவித்தார். இது 2019ஆம் ஆண்டின் 2,262ஐக் காட்டிலும் குறைவே.
இருப்பினும், கிருமி முறியடிப்பு காலகட்டம் நடைமுறையில் இருந்ததாலும் வர்த்தக நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டதாலும் இந்த சரிவு ஏற்பட்டிருக்கலாம் என்று அவர் சுட்டினார்.
வெவ்வேறு வேலையிட விபத்துகளில் சென்ற மாதம் மட்டும் 11 ஊழியர்கள் உயிரிழந்தனர். அவ்வாறு நேர்ந்த சம்பவங்களில் சில, 'ஃபோர்க்லிஃப்ட்' போன்ற இயந்திரப் பயன்பாட்டின்போது நேர்ந்தவை.
"ஒரு விபத்தோ ஒருவரின் உயிரோ, இழப்பு அதிகம்தான்," என்றார் திரு ஸாக்கி.
மேலும் அதிகமான முதலாளிகள், ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய செயலில் இறங்க வேண்டும் என்றார் அவர்.
இப்பொறுப்பை நிறுவனங்கள் ஊழியர்களிடத்தில் விட்டுவிடக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.
வேலையிட சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலும் திரு ஸாக்கி பேசினார். அத்துடன் மனநலத்தின் முக்கியத்துவத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.