சிங்கப்பூரின் கொவிட்-19 தடுப்பூசித் திட்டம் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகரும் வேளையில் வரும் வாரங்களில் சுமார் 30,000 குடியேறி ஊழியர்கள் முதல் தடுப்பூசியைப் பெறுவார்கள். 30 தங்குமிடங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இவர்கள். தகுதியுள்ள சுமார் 9,000 ஊழியர்களில் கிட்டத்தட்ட 97 விழுக்காட்டினருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுவிட்டதாக மனிதவள இரண்டாம் அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் ஊழியர் விடுதி
களாக உருவாக்கப்பட்ட ஆகப்பெரிய தங்குமிடங்களில் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் பத்தாயிரம் பேருக்குத் தடுப்பூசி போடும் திட்டம் இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தங்கு
விடுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள மருத்துவ நிலையங்களில் அவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் தங்களுக்கான இரண்டாவது தடுப்பூசியை அடுத்த மாதம் போட்டுக்கொள்ள உள்ளனர்.
பொங்கோலில் உள்ள எம்டபிள்யூஓசி எனப்படும் குடியேறி ஊழியர் வசிப்பிட மையத்தை நேற்று பார்வையிட்ட டாக்டர் டான் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார்.
புதிதாக சிங்கப்பூருக்கு வரும் ஊழியர்களுக்கான கொவிட்-19 பரிசோதனை, மேம்படுத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவு ஆகியவற்றை ஒரே இடத்தில் செய்துகொள்ள இத்தகைய எம்டபிள்யூஓசி வசிப்பிடங்கள் நான்கு சிங்கப்பூரில் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருவோரிடமிருந்து இங்கு கொவிட்-19 கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைக்க இந்த ஏற்பாடு கைகொடுக்கும். அதே நேரம் புதிய ஊழியர்கள் பாதுகாப்பாக சிங்கப்பூர் வந்து தங்கவும் இது வகைசெய்யும் என்று மனிதவள அமைச்சு ஏற்கெனவே கூறி இருந்தது. ஓராண்டு முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக இவை கட்டப்பட்டு வருகின்றன. ஐந்தாவது எம்டபிள்யூஓசி வசிப்பிடம் விரைவில் சுவா சூ காங்கில் கட்டப்பட உள்ளது. இந்த ஐந்து வசிப்பிடங்களிலும் 7,000 புதிய ஊழியர்கள் வரை தங்கி கட்டுப்பாடுகளை நிறைவேற்றலாம்.
குடியேறி ஊழியர்களுக்கான முதல் சுற்று தடுப்பூசி செயல்பாடு தனித்துவமிக்கதாக இருந்ததென டாக்டர் டான் கூறினார். அடுத்தகட்ட நடவடிக்கையாக பெரிய தங்குவிடுதிகளில் நிறைவேற்றப்படும் என்றும் பின்னர் கட்டம் கட்டமாக இதர பகுதிகளின் ஊழியர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறினார். இங்கு புதிதாக வரும் ஊழியர்கள் அவர்களது நாட்டில் ஏற்கெனவே போட்டுக்கொண்ட தடுப்பூசிக்கு சிங்கப்பூர் அங்கீகரிக்குமா என்று டாக்டர் டானிடம் செய்தியாளர்கள் வினவினர். இது பற்றி அவ்வளவு சீக்கிரத்தில் முடிவெடுக்க இயலாது என்றும் அவர்கள் எந்த மாதிரியான தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்கள் என்பதைப் பொறுத்து முடிவெடுக்கப்படலாம் என்றும் அவர் பதிலளித்தார்.
"பல தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். அதன் முடிவுகள் வெளியான பின்னர் இது பற்றி அதிகம் தெரிவிக்க முடியும்," என்று அவர் கூறினார். ஊழியர்களுக்கான கட்டுப்பாடுகளை விலக்குவது பற்றி அதிகமானோர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் முடிவெடுக்கப் படும் என்றும் அவர் தெரிவித்தார்.

