இந்தியாவில் கிருமிப் பரவல் நிலவரம் நேற்றும் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டது. ஒரே நாளில் 59,118 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் ஐந்து மாதங்களில் ஆக அதிக எண்ணிக்கையாக அது ஆகிவிட்டது. இவர்களையும் சேர்த்து இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11.85 மில்லியனாகி விட்டதாக இந்திய சுகாதார அமைச்சின் தரவுகள் தெரிவித்தன. மேலும் புதிதாக 257 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியானதைத் தொடர்ந்து அங்கு இதுவரை மாண்டோரின் எண்ணிக்கை 160,949 ஆக அதி கரித்துவிட்டது.
கடந்த ஒருவார காலமாக ஒவ்வொரு நாளும் கிருமித்தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதால் தடுப்பூசி போடும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.
அங்கு இதுவரை 55 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்த பெரிய எண்ணிக்கை. ஆயினும் 1.35 பில்லியன் மக்கள்தொகைக்கு இந்த எண்ணிக்கை மிகவும் குறைவு என கூறப்படுகிறது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கையை வேகமாகச் செயல்படுத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு உள்ளது.
இதற்கிடையே, இந்தியாவின் 2வது கட்ட கிருமிப் பரவல் சுமார் 100 நாள்களுக்கு நீடிக்கும் என்றும் ஏப்ரல் மாதம் உச்சத்தைத் தொடும் என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அறிக்கை கூறியது.

