இந்தோனீசியாவின் தென்சுலாவிசியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்துக்கு வெளியே இன்று காலை வெடிகுண்டு வெடித்ததில் இருவர் மாண்டனர்; குறைந்தது 20 பேர் காயமுற்றனர். இந்தச் சம்பவம் தற்கொலைத் தாக்குதலாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. மாண்டவர்கள் இருவரும் அந்தத் தாக்குதலை நடத்தியவர்களாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அந்தத் தேவாலயத்தில் இன்று கூட்டுப் பிரார்த்தனை முடிந்தபோது அதன் வளாகத்திற்குள் இருவர் மோட்டார் சைக்கிளில் நுழைய முயன்றதாக இந்தோனீசிய போலிசார் தெரிவித்தனர்.
அவர்களைத் தேவாலயத்தின் பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தியபோது குண்டு வெடித்ததாக தெரிவிக்கப்பட்டது.
தாக்குதல் நடத்தியதாக நம்பப்படும் இருவரின் சடலங்களுடன் மற்ற உடல் உறுப்புகளும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்டதாகவும் அவை குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் இந்தோனீசிய போலிசார் கூறினர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

