கொவிட்-19 தொற்று பெருகி வரும் 12 மாநிலங்கள் மீது இந்திய அரசு தீவிர கவனம்
இந்தியாவில் கொவிட்-19 பரவல் நிலவரம் கடந்த இரு வாரங்களாக மோசமடைந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கூடுதலானவர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்றுக் காலை வரையிலான 24 மணி நேரத்தில் 62,714 பேர் பாதிக்கப்பட்டனர். புதிதாக 312 பேர் உயிரிழந்துவிட்டனர். வாராந்திர அடிப்படையில், தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 7.7 விழுக்காடும் மரணமடைந்தோர் எண்ணிக்கை 5.1 விழுக்காடும் அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதத்திற்குப் பிறகு இந்த அளவிற்கு மோசமான நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக, 12 மாநிலங்களிலும் 46 மாவட்டங்களிலும் அதிகக் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், அரியானா, தமிழ்நாடு, சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப், பீகார் ஆகியவையே அந்த மாநிலங்கள்.
மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் 46 மாவட்டங்களில் 36 மாவட்டங்கள் மகாராஷ்டிர மாநிலத்தில்தான் உள்ளன. இவற்றில் 25 மாவட்டங்களில்தான் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் பதிவான தொற்று எண்ணிக்கையில் 59.8% இந்த மாவட்டங்களில் பதிவானவை.
மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள், மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் காணொளி வழியாக உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த ஐந்து அம்ச உத்தி ஒன்று இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது.
பரிசோதனைகளை அதிகளவில் நடத்துதல், பாதிப்பு கண்டறியப் பட்ட 72 மணி நேரத்தில் பாதிக்கப் பட்டோருடன் தொடா்பில் இருந்த ஏறக்குறைய 30 பேரை கண்டறிந்து அவா்களைப் பரிசோதித்து தனிமைப்படுத்துதல், பொது, தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல், சரியான கொவிட்-19 விதிமுறைகளை உறுதிசெய்தல், அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறை ஆகியன ஐந்து அம்ச உத்தியில் அடங்கும்.
இதனைத் தீவிரமாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
கொரோனா தொற்றால் உயிரிழந்தோரில் கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் 45 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்றும் கிருமித்தொற்று பாதிப்புகள் குறித்து அறிந்திருந்தபோதிலும் 44 விழுக்காட்டினர்தான் முகக்கவசம் அணிகிறார்கள் என்றும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சந்தைகள், பேருந்து நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், ரயில் நிலையங்கள் உட்பட மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

