கொவிட்-19 மீட்சி மானியம் பற்றி அமைச்சு அறிவிப்பு
கொவிட்-19 மீட்சி மானியம் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது முதல் 10,000க்கும் மேற்பட்டோருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது. கொவிட்-19 சூழல் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிப்படைந்தோருக்கு இந்த மாதம் 22ஆம் தேதி நிலவரப்படி ஏறத்தாழ $10 மில்லியன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களையும் மானியத்தின்கீழ் கூடுதல் ஆதரவையும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று அறிவித்தது.
ஏற்கெனவே இந்த மானியத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், இதற்கான தகுதிக்கூறுகளைத் தொடர்ந்து பூர்த்திசெய்யும் பட்சத்தில் கூடுதல் உதவி தேவைப்பட்டால் மேலும் மூன்று மாதங்களுக்கு உதவிபெற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து நேற்று ஃபேஸ்புக் பதிவு ஒன்றை வெளியிட்ட சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, கொவிட்-19 சூழலில் சிங்கப்பூரர்கள் சவால்களை எதிர்கொள்ள அவர்களுக்கு அமைச்சு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று கூறினார்.
கொவிட்-19 சூழலால் பாதிக்கப்பட்டு உள்ள குறைந்த, நடுத்தர வருமான ஊழியர்களுக்கும் தன்னுரிமை ஊழியர்களுக்கும் உதவ ஜனவரி 18ஆம் தேதி கொவிட்-19 மீட்சி மானியம் தொடங்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக தங்களது வேலைகளை இழந்த ஊழியர்கள், அல்லது சம்பளமில்லாத கட்டாய விடுப்பில் சென்றவர்கள், அல்லது குறிப்பிடத்தக்க அளவு வருமானத்தை இழந்தவர்கள் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்தவர்கள், அல்லது வேலை ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது குறைந்தது மூன்று மாதங்களுக்கு சம்பளமில்லா கட்டாய விடுப்பில் சென்றவர்களுக்கு மாதத்திற்கு $700 வரை என மூன்று மாதங்களுக்கு இந்த மானியம் நிதி ஆதரவு வழங்குகிறது.
குறைந்தது மூன்று மாதங்களாக சம்பளக் குறைப்பால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மாதத்திற்கு $500 வரை என மூன்று மாதங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. அத்தகைய ஊழியர்களுக்கு சராசரி ஒட்டுமொத்த சம்பளக் குறைப்பு குறைந்தது 50 விழுக்காடாக இருக்க வேண்டும்.
தொடர்ந்து மூன்று மாதங்களாக குறைந்தது 50 விழுக்காடு சராசரி ஒட்டுமொத்த வருமான இழப்பால் பாதிக்கப்பட்டுள்ள தன்னுரிமை ஊழியர்களுக்கும் மாதத்திற்கு $500 வரை என மூன்று மாதங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது.
தற்போது இந்த மானியத்தைப் பெறுபவர்கள் வழங்கீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ளும் கடைசி மாதத்திலோ கடைசி மாத வழங்கீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பிறகோ இரண்டாவது முறையாக உதவிபெற விண்ணப்பிக்கலாம். முதன்முறை விண்ணப்பதாரர்களும் இந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மானியத்திற்கு விண்ணப்பிக்க https://msf-csg.gov.sg/preinstruction/crg எனும் இணையப் பக்கத்திற்குச் செல்லலாம். ஏப்ரல் 18ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 19 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை இந்த இணையப் பக்கம் எல்லா நேரமும் செயல்படும்.

