தடுப்பூசிச் சான்றிதழ் குறித்த பேச்சுவார்த்தை
கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழுக்கு இருதரப்பு அங்கீகாரம் அளிப்பது தொடர்பிலான பேச்சுவார்த்தை, தனிமை உத்தரவு தேவைப்படாத பயணங்களை மீண்டும் தொடங்குவதற்கான முதல் படி என்று சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
கொவிட்-19 பரிசோதனை, தடமறிதல், சமூக இடைவெளி நடைமுறைகள் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நோய்ப் பரவலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளுடனும் வட்டாரங்களுடனும் புதிய பயண ஏற்பாடுகளைத் தொடங்குவதற்கான வழிமுறைகளைத் தான் ஆராய்ந்து வருவதாக அமைச்சு நேற்று தெரிவித்தது.
கொவிட்-19 தொற்று விகிதத்தை குறைக்க தடுப்பூசி உதவுவதாக போக்குவரத்து அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பிலும் இரு நாடுகளுக்கு இடையிலும் தடுப்பூசிச் சான்றிதழ் குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க சற்று காலம் எடுக்கும் என்று அவர் சொன்னார். காரணம், பெரும்பாலான இடங்களில் தற்போதுதான் தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் தடுப்பூசிச் சான்றிதழ் பற்றி அவை ஆராய்ந்து வருவதாகவும் அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
"எங்களது பங்காளித்துவ நாடுகள் அல்லது வட்டாரங்களுடன் இது தொடர்பிலான பேச்சுவார்த்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்தவுடன் இதுகுறித்த மேல் அறிவிப்புகளை நாங்கள் வெளியிடுவோம்," என்று அப்பேச்சாளர் கூறினார்.
எல்லைகளைப் பாதுகாப்பாக திறக்க ஹாங்காங்கிடம் இருந்து கிடைத்த பரிந்துரையை சிங்கப்பூர் ஆராய்ந்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
மின்னிலக்கத் தடுப்பூசிக் கடப்பிதழ் முறையை உருவாக்குவது குறித்து கலந்து ஆலோசிக்க தாம் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வது குறித்த திட்டங்களை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துறை அமைச்சர் இந்த மாதம் 15ஆம் தேதி அறிவித்திருந்தார்.

