முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பில் முஃப்தி-பிரதமர் கடிதப் பரிமாற்றம்
பணியிடங்களில் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிவது தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதை முஸ்லிம் சமூகத்தினர் வரவேற்பதாக முஃப்தி டாக்டர் நசிருதீன் முகம்மது நசிர் தெரிவித்துள்ளார்.
இது ஒரு கடினமான, மாறுபட்ட பரிசீலனைகளுடன் கூடிய சிக்கலான முடிவு என்பதை முஸ்லிம் சமூகம் அறிந்துள்ளதாகவும் இச்செய்தி முஸ்லிம் தாதியருக்கு ஆறுதல் தரும் என நம்புவதாகவும் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு எழுதிய கடிதத்தில் டாக்டர் நசிருதீன் குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, பணியிடங்களில் முஸ்லிம் தாதியரைத் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கலந்துரையாடல்களுக்கு ஆதரவு அளித்து வருவதற்காக டாக்டர் நசிருதீனுக்கும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்திற்கும் (முயிஸ்) பிரதமர் லீ பதில் கடிதம் மூலமாக நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முஸ்லிம் சிங்கப்பூரர்களுக்குத் தலையங்கி தொடர்பில் அதிகரித்து வரும் சமூக-சமய முக்கியத்துவத்தை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகக் கூறிய திரு லீ, அதை எப்படிச் செய்வது என்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 27ஆம் தேதி டாக்டர் நசிருதீன் எழுதிய கடிதத்தையும் அதற்குப் பிரதமர் எழுதிய பதில் கடிதத்தையும் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்டது.
தப்பெண்ணமும் பாகுபாடும் இன்றி எல்லாரையும் சமமாகப் பாவிப்பதன் மூலமும் ஒவ்வொருவரும் தங்களுடைய நம்பிக்கையையும் வாழ்க்கைமுறையையும் கடைப்பிடிக்க அனுமதிக்கும் வகையில் அனைத்துச் சமூகத்தினரும் பகிர்ந்துகொள்ளும் ஒரு தேசிய அடையாளத்தை உருவாக்கியதன் மூலமும் இன, சமய நல்லிணக்கத்தில் சிங்கப்பூர் ஒரு நுண்மையான சமநிலையை எட்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
"ஆயினும், அந்தச் சமநிலை மாறக்கூடியது. சிங்கப்பூரின் இளம் தலைமுறையினர் வளரும்போதும் மனப்பான்மை மாறும்போதும், புதிய பிரச்சினைகளும் அழுத்தங்களும் எழலாம். சிங்கப்பூர் சூழலைக் கருத்தில்கொண்டு அவற்றுக்கு விடை காணப்பட வேண்டும்," என்றார் பிரதமர்.
"எந்த ஒரு மாற்றமும் கவனமான பரிசீலனைக்குப் பிறகும் படிப்படியாகவும் இடம்பெறவேண்டும். அப்பொழுதுதான் அனைத்துச் சமூகங்களும் மாற்றங்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும்; அம்முடிவுகள் நமது இன, சமய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும்," என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை மூத்த முஸ்லிம் தலைவர்களைச் சந்தித்தபோது, பணியிடங்களில் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து இந்தக் கடிதப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

