கொவிட்-19 முறியடிப்புத் திட்டம் அறிமுகமாகி ஓராண்டு நிறைவு
'சர்க்கிட் பிரேக்கர்' எனப்படும் கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் 1 வரை அது நடப்பில் இருந்தது. திட்டம் அறி முகம் கண்டு ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள், மக்களிடையே ஆய்வு ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தது.
ஆய்வில் பங்கேற்ற 1,000 பேரில் 61 விழுக்காட்டினர் இந்த ஓராண்டு காலத்தில் தங்களது குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்த மற்றவர்களுடனான சமூகத் தொடர்பு குறைந்துவிட்டதாகக் கூறினர்.
மேலும், தங்களது குடும்பத்துக்கு வெளியே சமூக வட்டாரம் சுருங்கிவிட்டதாக 44 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதேநேரம் தங்களது குடும்பத்துடன் இந்த ஓராண்டில் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததாக 20 விழுக்காட்டினர் குறிப்பிட்டனர். ஆயினும் அந்த அளவுக்கு இல்லை என 23 விழுக்காட்டினர் கூறினர்.
இணையம் வழியே நடத்தப்பட்ட ஆய்வில் 16 வயதினரும் அதற்கு மேற்பட்ட வயதினரும் பங்கேற்றனர். மிலியு இன்சைட் என்னும் நிறுவனம் இவ்வாண்டு மார்ச் 25 முதல் மார்ச் 29 வரை ஆய்வை மேற்கொண்டது.
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்ததாக 27 விழுக்காட்டினர் கூறிய வேளையில் 7 விழுக்காட்டினர் அவ்வாறு இல்லை என்றனர்.
2020 ஏப்ரல் 7ஆம் தேதி கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் நடப்புக்கு வந்த பின்னர் பல தடைகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடைகளில் அமர்ந்து சாப்பிடவும் அத்தியாவசிய காரணங்கள் இன்றி வீட்டைவிட்டு வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதிகமான வேலையிடங்களும் பள்ளிக்
கூடங்களும் மூடப்பட்டன.
தற்போது அந்தக் கட்டுப்
பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் இன்னும் அனுமதி இல்லை.
இந்நிைலயில், இந்த ஓராண்டு காலத்தில் மக்கள் தங்களுக்கு இடையிலான சமூகத் தொடர்பைக் குறைத்துக் கொண்டதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக சிங்கப்பூர் தேசிய பல்
கலைக்கழகத்தின் சமூகவியல் துறை துணை பேராசிரியர் டான் எர்ன் செர் கூறுகிறார்.
"ஒருவரோடு ஒருவர் நேரடியாகச் சந்தித்துப் பேசாத நிலையில் அவர்கள் மின்னிலக்கம் வழி தொடர்பு வைத்திருக்க வாய்ப்பு உள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்தல், வேலைப்பளு அதி
கரிப்பு போன்ற காரணங்களால் சக ஊழியர்களைச் சந்திக்க இயலாமல் இருக்கலாம்," என்றார் அவர்.
இருப்பினும் சமூக ஆதரவு, தகவல் பரிமாற்றம் போன்ற பலன்களை அடைய பொதுமக்கள் தங்களது சமூகக் கட்டமைப்பை விரிவாக்கி பராமரிப்பது அவசியம் என்று பேராசிரியர் டான் ஆலோசனை வழங்கினார்.
ஓராண்டில் புதிய திறன் அல்லது விருப்ப வேலையைப் பெற்றதாக 60 விழுக்காட்டினர் கூறினர். இவர்களில் 94 விழுக்காட்டினர் புதிய திறன்கள் அல்லது விருப்ப வேலையில் சிலவற்றை இன்னும் பயன்படுத்துவதாகக் கூறினர். புதிய திறன்கள் பெறுவதைத் தொடர்வதாகவும் இவர்கள் குறிப்பிட்டனர்.
எதிர்மறை விளைவுகளும் இந்த ஓராண்டில் நிகழ்ந்திருப்பதை ஆய்வு உணர்த்தியது. தங்களது மனநலச் சுகாதாரம் மோச
மடைந்ததாக 36 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தங்களது வாழ்க்கை அதிக மின்னிலக்கமயமாகி இருப்பதாக சிலர் கூறினர். அதன் காரணமாக ரொக்கமற்ற பரிவர்த்தனையைக் கடைப்பிடிப்பதாக மூன்றில் இரு பங்கினர் கூறினர்.
ஆய்வில் பங்கேற்றோரில் 52 விழுக்காட்டினர், கொவிட்-19 நோய் முறியடிப்புத் திட்டம் தொடங்கியது முதல் தங்களுக்கான வேலைப்பளு கூடியதாகக் கூறினர். ஆட்குறைப்பு செய்யப்பட்டது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் அவர் கள். அதனால், இரவு பகல் எந்த நேரத்திலும் அலுவலக மின்னஞ்சலுக்குப் பதில் அளிக்கும் அளவுக்கு அழுத்தம் ஏற்பட்டதாகச் சிலர் கூறினர்.

