முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பான விவகாரம்
முஸ்லிம் தாதியர் தங்களது சீருடையின் அங்கமாக தலையங்கி அணிய அனுமதிப்பது தொடர்பான முடிவு, இவ்வாண்டு ஆகஸ்ட் இறுதியில் இடம்பெறும் தேசிய தினப் பேரணி உரையின்போது அறிவிக்கப்படலாம் என பிரதமர் லீ சியன் லூங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் டெஸன்சன் சாலையில் உள்ள பொதுச் சேவை மனமகிழ் மன்றத்தில் நேற்று மலாய்/முஸ்லிம் சமூகத்தினர், சமயத் தலைவர்கள் என ஏறக்குறைய 70 பேருடன் பிரதமர் லீ கலந்துரையாடினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், சமூகத்திலும் பணியிடங்களிலும் தலையங்கி அணிவது அதிகரித்திருப்பதாலும் அதுகுறித்த மனப்போக்கு மாறி வருவதாலும் அத்தகைய நடவடிக்கைக்கு அரசாங்கம் தயாராக வேண்டும் என்றும் அதற்கு அதிக வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
"அம்மாற்றத்தை மேற்கொள்ளுமுன், அடித்தள அளவில் ஆயத்தமாக வேண்டும். கவனத்துடன் செய்யப்படும் சரிக்கட்டல் என்பதையும் ஒட்டுமொத்த மாற்றமல்ல என்பதையும் எல்லாரும் புரிந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும். இத்தகைய மாற்றங்களைச் செய்யுமுன் வரம்புகள் என்ன என்பதை மக்கள் உணர்ந்துகொள்ளவேண்டும் என விரும்புகிறோம்," என்றார் பிரதமர்.
முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதோரும் ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் கடைசியாக 2014ஆம் ஆண்டில் ஒரு கலந்துரையாடலில் தாம் பங்கேற்றதாகக் கூறிய அவர், நேற்றைய கலந்துரையாடல் தெளிவானதாகவும் உண்மையானதாகவும் இருந்தது என்றும் குறிப்பிட்டார்.
பல இன, சமய மக்கள் வாழும் சிங்கப்பூரில் நுட்பமான சமநிலை எட்டப்பட வேண்டியுள்ளது என்றும் ஆயினும் நல்லிணக்கத்தைப் பேணுவதிலும் பொதுவெளியைப் பராமரிப்பதிலும் சிங்கப்பூர் முழுக் கடப்பாட்டுடன் உள்ளது என்றும் திரு லீ கூறினார்.
"நல்ல நோக்கத்துடன் முடிவுகளை எடுக்கும்போது தேவையில்லாத விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க விரும்புகிறோம்," என்றார் அவர்.
முஸ்லிம் தாதியர் தங்களது சீருடையுடன் தலையங்கி அணிந்து கொள்ளும் வகையில் மாற்றம் செய்ய முடியும் என்று பிரதமர் சொன்னார்.
"அம்மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம். ஆனால், அதற்குச் சிறிது கால அவகாசம் தேவை. அது குறித்துச் சமூகத் தலைவர்களுடன் ஆலோசித்து இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் அதற்கான செயல்முறையில் எங்களுக்கு உதவுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளேன்," என்றும் திரு லீ கூறினார்.
இவ்விவகாரம் குறித்துப் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த மார்ச் 23ஆம் தேதி சட்ட, உள்துறை அமைச்சர், முஸ்லிம் தலைவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, பணியின்போது முஸ்லிம் தாதியர் தலையங்கி அணிய அனுமதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக திரு சண்முகம் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்றைய கலந்துரையாடல் ஆக்ககரமாகவும் தெளிவாகவும் இருந்ததாக முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
"இன, சமய உணர்வுகள் தொடர்புடையது என்பதால் இவ்விவகாரத்தைக் கவனமாக அணுகவேண்டும் எனும் பொதுவான புரிதல் அரசாங்கத்திற்கும் சமூகத்திற்கும் இருக்கிறது. அதனால், அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாது," என்றார் அவர்.

