இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின்போது இடம்பெற்ற மோதலில், மத்திய பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நால்வர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்கத்தில் நேற்று நான்காம் கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது.
இந்நிலையில், கூச் பிகார் மாவட்டத்தில் சீத்தல்குச்சி பகுதியில் இருந்த வாக்குச்சாவடிக்கு வெளியே மோதல் வெடித்ததாகச் சொல்லப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் தாக்குதலில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாதுகாப்புப் படையினர் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நால்வர் மாண்டதைத் தொடர்ந்து அவ்வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சம்பவம் நிகழ்ந்த சீத்தல்குச்சி பகுதிக்கு இன்று நேரில் செல்லவிருக்கிறார். அத்துடன், மாநிலம் முழுவதும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் கறுப்புப் பட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5 மணிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, நால்வர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தாவையும் அவரது திரிணாமூல் கட்சியையும் கடுமையாகச் சாடினார்.
"கூச் பிகார் சம்பவம் வருத்தம் அளிக்கிறது. துயரினில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு இரங்கல் தெவித்துக்கொள்கிறேன். மக்கள் மத்தியில் பாஜகவிற்குப் பெருகி வரும் ஆதரவைக் கண்டு மம்தாவும் திரிணாமூல் குண்டர்களும் நடுங்கிப்போயுள்ளனர்," என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சீத்தல்குச்சி துப்பாக்கிச்சூட்டிற்கு மத்திய அரசே காரணம் எனச் சாடிய மம்தா, அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்.
"வெற்றிபெற முடியாது என பாஜகவிற்குத் தெரியும். அதனால்தான் அது வெடிகுண்டுகளையும் வன்முறையையும் நாடி வருகிறது," என்று அவர் கூறினார்.

