சிங்கப்பூரின் தத்தெடுப்பு நடைமுறையை ஒழுங்குபடுத்த புதிய சட்டங்களுக்குத் திட்டமிடப்பட்டு உள்ளது.
முறையற்ற தத்ெதடுப்பை குற்றமாக்கும் வகையில் அந்தச் சட்டங்கள் அமைய உள்ளன. தங்களது பிள்ளையை தத்துகொடுக்க சம்மதிக்கும் பெற்றோர்கள் தத்தெடுப்பு நடைமுறையை நிறைவேற்றும் வேளையில் அது தொடர்பான முக்கிய தகவல்களை மறைக்கும் தந்திரத்தை முறியடிக்கவும் புதிய முயற்சிகள் கைகொடுக்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு தெரிவித்து உள்ளது. குழந்தைத் தத்தெடுப்புச் சட்டம் தொடர்பான மறுஆய்வின் தொடர்பில் பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அப்போது வெளியான கருத்துரைப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சு இதனைத் தெரிவித்து உள்ளது.
தத்தெடுப்பு தொடர்பான புதிய குற்றங்களுக்கு சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க அமைச்சு உத்தேசித்துள்ளதாக அரசாங்கத்தின் கருத்தறியும் இணையத்தளமான 'ரீச்'சில் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசடி மூலம் குழந்தையைத் தத்தெடுக்க அனுமதிப்பது, முழுமையடையாத, தவறான, பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அல்லது தகவல்களைக் கொடுப்பது, தத்தெடுக்கத் தகுதியானவர் என்று முடிவு செய்யப்படாதவரிடம் பிள்ளையைக் கொடுப்பது, அவரின் பராமரிப்பில் பிள்ளையை வைப்பது போன்றவற்றை குற்றமாக வகைப்படுத்தப் பரிசீலிக்கப்படுகிறது.
பொதுமக்களும் தத்தெடுப்பில் ஈடுபடுவோரும் சட்டவிதிகளுக்கு உட்படாத தத்தெடுப்பு பற்றி புகார் தெரிவிக்க வேண்டும் என அமைச்சு விரும்புவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

