ஒரே நாளில் அதிகமான கிருமிப் பரவல் என்பதில் இந்தியா மீண்டும் உச்சத்தைத் தொட்டுள்ளது. திங்கட்கிழமை காலை அறிவிக்கப்பட்ட தகவலின்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 168,912 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஒரே நாளில் இந்த அளவுக்கு அதிகமாகத் தொற்றுச் சம்பவம் பதிவாகி இருப்பது உலகில் முதல்முறை என்று ராய்ட்டர்ஸ், புளூம்பெர்க் செய்தி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இந்த அபாயநிலை இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. தற்போது விமரிசையாக நடைபெற்று வரும் கும்பமேளா திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒரே பகுதியில் குழுமி வருவதால் தொற்று எண்ணிக்கை மேலும் வேகமாக அதிகரிக்கும் எனவும் அவை குறிப்பிட்டு உள்ளன. திங்கட்கிழமை நிலவரப்படி உலகில் பதிவான ஒட்டுமொத்த கிருமித்தொற்று சம்பவங்களில் ஆறில் ஒன்று இந்தியாவில் உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டு வருவதைத் தொடர்ந்து நேற்று உலக அளவிலான கிருமித்தொற்று எண்ணிக்கையில் பிரேசிலைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இந்தியா மீண்டும் இரண்டாம் இடத்திற்குச் சென்றுவிட்டது. இந்தியாவின் தற்போதைய மொத்த கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 13.53 மில்லியன்.
பிரேசிலில் அந்த எண்ணிக்கை 13.48 மில்லியன். 31.2 மில்லியன் தொற்று சம்பவங்களோடு முதலிடத்தில் அமெரிக்கா தொடருகிறது. கிருமிப் பரவல் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலிருந்த இந்தியாவில் நிலைமை முன்னேற்றம் கண்டதைத் தொடர்ந்து மூன்றாவது இடத்திற்குச் சென்றிருந்தது. தற்போது இரண்டாவது அலை வேகமெடுத்திருப்பதால் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளது.
தொற்றுச் சம்பவங்களோடு உயிர்ப்பலியும் இந்தியாவில் அதி கரித்த வண்ணம் உள்ளது. திங்கட்கிழமை வெளியான தகவலின்படி 24 மணி நேரத்தில் 904 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகிவிட்டனர். ஞாயிற்றுக்கிழமை அந்த எண்ணிக்கை 839 ஆக இருந்தது. அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு அதிக மரணம் நிகழ்ந்திருப்பது இப்போதுதான். புதிய மரணங்களையும் சேர்த்து தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை 170,179 என அதி
கரித்தது.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் பகுதியில் அமைந்துள்ள கங்கைக் கரையில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் கும்பமேளா திருவிழா தற்போது நடந்து வருகிறது. அங்கு நேற்று முன்தினம் ஹரித்துவாரில் கூடிய பல்லாயிரம் பேரில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணி யவில்லை. சமூக இைட வெளி நடைமுறையும் சரிவரப் பின்பற்றப்படவில்லை. எனவே தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் பெருகும் என்று சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். பரவலைக் கட்டுப் படுத்த தடுப்பூசி நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கட்டுப்படாத கிருமிப் பரவல்; 170,000 பேர் மரணம்

