அடுத்த மாதம் 4ஆம் தேதியன்று மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டு பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்-மலேசியா எல்லை யை மீண்டும் திறப்பது உட்பட மற்ற விவகாரங்கள் குறித்தும் இருநாடுகளின் தலைவர்கள்
பேச்சுவார்த்தை நடத்துவர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் ஹிஷாமுதீன் உசேன் தெரிவித்தார். கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக சிங்கப்பூருக்கான மலேசியத் தூதரை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த ஓராண்டாக அப்பதவியில் யாரும் இல்லை என்றும் அமைச்சர் ஹிஷாமுதீன் கூறினார்.
இருப்பினும், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல் சீராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, சிங்கப்பூருடனான எல்லையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் திறக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில அரசு விருப்பம் தெரிவித்துள்ளது.
ஆனால் அதற்கு முன்பு சிங்கப்பூரின் அனுமதியை மலேசியா பெற வேண்டும் என்று திரு ஹிஷாமுதீன் கூறினார்.
"எல்லையை மீண்டும் திறப்பது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. அண்மையில் சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மலேசியாவுக்கு வந்திருந்தார். எல்லையை மீண்டும் திறப்பது குறித்து அவருடன் கலந்துரையாடினோம். பிரதமர் முகைதீன்-பிரதமர் லீ இடையிலான சந்திப்பின்போது எல்லைத் திறப்பு பற்றிய கலந்துரையாடல் முக்கிய இடம்பெறுவது உறுதி செய்யப்படும்," என்றார் திரு ஹிஷாமுதீன்.
கடந்த மாதம் 23ஆம் தேதியன்று வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மலேசியாவுக்குச் சென்றிருந்தபோது திரு ஹிஷாமுதீனைச் சந்தித்துப் பேசினார்.
அந்தந்த நாடுகளின் தடுப்பூசி சான்றிதழ்களை ஏற்று சிங்கப்பூர்-மலேசியா இடையே இருவழிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய சந்திப்பின்போது அமைச்சர்கள் இருவரும் இணங்கினர். தற்போது நடப்பில் உள்ள இரு
வழிப் பயணப் பாதை, அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாடு ஆகியவற்றுடன் மற்ற பயணக் குழுக்களும் படிப்படியாக இருநாடுகளுக்கிடையே பயணம் செய்யும் வழிமுறைகளை வகுக்க இரு அமைச்சர்களும் இணங்கியதாக தெரிவிக்கப்பட்டது.